Sunday 15 August 2021

குழந்தைகள் மீதான வன்முறைகள் மற்றும் பாலியல் அத்துமீறல்கள்

 

CHILD abuse and TN education system:

பள்ளிக்கல்வித்துறை மாற்றி சிந்திக்க வேண்டிய சரியான தருணம் இதுதான்...

பழையகால கல்வி வழிமுறைகளை தூக்கிப் போட வேண்டிய சரியான நேரம் இது. அதற்கு கரோனா ஒரு காரணமாகவும் பல பள்ளிகளில் நடக்கின்ற பாலியல் அத்துமீறல்கள் ஒரு காரணமாகவும் கொண்டு இப்போதே அரசும் ஒவ்வொரு பெற்றோர்களும் இதன் தேவையை முதலில் உணர வேண்டும்.

இந்த தகவல் புரட்சி யுகத்தில் மிகப்பிரம்மாண்டமான கட்டிடங்களை வைத்துக்கொண்டு பள்ளி நடத்துவதை முதலில் மாற்றியே தீர வேண்டும் இரண்டாவதாக மனித உடல்களை பற்றி மனித உணர்வுகளை பற்றி மனித வாழ்க்கை முறையை பற்றி எந்த ஒரு குழந்தையும் கல்லூரி முடியும் காலம்வரை உணர வழி முறைகள் இந்த பாடத்திட்டங்களில் இல்லை. அதன் காரணமாக பல்வேறு வாழ்க்கைப் பிரச்சினைகளையும் ஒவ்வொரு மாணவ/மாணவியரும் பள்ளி காலகட்டங்களை முடித்து வெளியே வரும்போது எதிர்கொள்கிறார்கள்.

அரசு உடனடியாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்தே தீர வேண்டும். எந்த மத நிறுவனங்களும், சாதிகளும் ஒரு பள்ளியை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட கூடாது. ஒருகாலத்தில் அதன் தேவை இருந்தது.இப்போது தேவையில்லை. ஒரு மாணவி இன்று குறைந்தபட்சம் 6 லிருந்து 10 முறை கடவுள் சம்பந்தமான பாடல்கள், பிரார்த்தனைகள் போன்ற மூடநம்பிக்கையை மட்டும் வளர்த்துகின்ற விடயங்கள் இன்று பள்ளிகளில் தேவையின்றி கட்டாயத்தின் பேரில் அனுபவிக்க வேண்டிய நிலையில் இருக்கிறாள். எந்த மதத்தை சார்ந்த பள்ளியில் சேர்ந்து படித்தாலும் ஒரு அடிமையை நடத்துவதைவிட கீழ்தரமாகவே ஒரு மாணவன் அல்லது மாணவி கடவுள் என்ற பெயரில் நடத்தப்படுகிறார்கள். பள்ளிக்கூடங்கள் அதற்கான இடம் அல்ல.

அவர்கள் கடவுளை பற்றி சொந்த வீடுகளில் வேண்டுமானால் கற்றுக்கொள்ளட்டும். ஒரு மாண- வன் /வி க்கு என்று எந்த ஒரு குரலும் பள்ளிக்கூடங்களில் ஒலிப்பதற்கு அல்லது அவர்களது சந்தேகங்களை / குறைகளை முறைப்படி ஆராய்ந்து தீர்ப்பதற்கு ஒரு வழிமுறையும் இல்லை என்பதை மீறி சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும் என மிரட்டவும் செய்கிறார்கள்.

இதில் மிக கொடூரமான நிலை என்னவென்றால் பி டி ஏ (PTA) என்ற பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் என்ற ஒரு அமைப்பை பள்ளிக்கூடங்கள் வைத்திருந்தாலும் அதன் பயன் என்ன என்பது இதுவரை யாரும் கண்டடைந்தது கிடையாது. காரணம் அது யாருக்காக வை க்கப்பட்டு இருக்கிறதோ அவர்கள் அதில் பங்குதாரர்கள் அல்ல அல்லது கருத்து கூற அல்லது கூறுகின்ற கருத்துக்கு எந்த மரியாதையும் இல்லை.

Ex:- ஒரு திருமணத்தை பெற்றோர்கள் சேர்ந்து முடிவெடுத்து நடத்தினாலும் இப்போதைய நடைமுறையில் குறைந்தபட்சம் பிடித்திருக்கிறதா என்ற ஒரு கேள்வியாவது இந்த சமுதாயம் இப்போது அந்த ஆண்/பெண்ணிடம் கேட்கிறது. ஆனால் குழந்தைக்கு அந்த பள்ளியில் என்ன பிரச்சனை என்று பொதுவெளியில், வீட்டில், பள்ளிக்கூடத்தில் எங்குமே யாருமே கேட்பதில்லை கேட்பதற்கான உரிமையும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. பிள்ளைகளுக்கான அனைத்து முடிவுகளும் தாங்கள் சரியாகத்தான் எடுக்கிறோம் என நம்புகின்ற ஆசிரியர்கள் ஒருபுறம், மறுபுறம் கட்டிய பணத்துக்கு தேவையான பணம் சம்பாதிக்கும் வசதியான விஷயங்கள் மட்டும் தான் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுத்தால் போதும் அது தான் தேவை என்று நம்புகிற பெற்றோர்கள் மறுபுறம் இருப்பதால் எந்த ஒரு மாணவனும் அவனுக்குத் தேவையான சந்தேகங்களை, உணர்வுகளை, பிரச்சனைகளை, கற்பனைகளை, திட்டங்களை எதையும் கேட்பதற்கு ஒரு காது இல்லாத ஒரு சூழ்நிலையில் வாழுகிறான்.

இப்படி ஒரு இக்கட்டில் இருக்கின்ற மாணவன் அல்லது மாணவி வகுப்பில் ஏற்படுகின்ற எந்த பிரச்சனையை பத்தாம் வகுப்பு வரைக்கும் யாரிடம் பேசி புரிய வைக்க முடியும். எந்த விதமான விளக்கங்களை கொடுத்து பெற்றோர்களை நம்பவைக்க முடியும்.

எடுத்துக்காட்டாக:- ஒரு ஆசிரியர் ஒரு மாணவியின் நெஞ்சை கசக்கி விட்டால் அதை எப்படி முயன்றாலும் ஒரு குழந்தையால் அதை நிரூபிக்க முடியாது. காரணம் அதற்கு அவள் தான் ஒரே சாட்சி. இப்படியான விஷயங்களை பொது வெளியில் பேசுவதற்கு முதலில் பெற்றோர்களும் அஞ்சுகிறார்கள். பெற்றோர்களிடமும் சொல்லி இதை தடுப்பதற்கு வழி முறைகள் என்று எதுவுமே இல்லாத ஒரு கல்வி பின்புலத்திலிருந்து மாணவிகளை காப்பாற்றுவது சாதாரணமான விஷயமல்ல.

ஆனால் அரசு இதற்கு மிக எளிதான தீர்வுகளைக் கண்டறிய முடியும். பள்ளிக்கூடங்கள் அனைத்துமே பத்து முதல் ஆயிரம் மாணவர்களை இணையம் மூலம் இணைத்து இன்று தகவல் புரட்சி யுகத்தில் அனைத்துமே அவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே கற்பிக்க முடியும். ஒரு நாளில் குறைந்தபட்ச நேர ஒதுக்கீடு செய்து மற்ற நேரங்களில் பலவிதமான விஷயங்களில் ஒரு மாணவ மாணவியரை பங்களிக்க வைக்க முடியும். செய்முறை பயிற்சி என்பது மிக தேவையான ஒன்று என்பதால் அதை கற்பிப்பதற்கு அரசு மாவட்டத்தின் பல இடங்களில் இப்போது இருக்கக்கூடிய பள்ளிக்கூடங்களை பயிற்சி கூடங்கள் ஆக மாற்றி ஒவ்வொரு நாட்களும் கொஞ்சம் மாணவர்களை கொஞ்சம் நேரம் அங்கு அனுப்பி வைக்க முடியும். அந்த இடங்களில் மிக தெளிவான வழிகாட்டு முறைகளுடன் கூடிய கற்பித்தல் அதோடு கண்காணிப்பு செய்ய முடியும். அனைத்துமே, அதாவது ஒரு ஆசிரியர் பேசுவது, மாணவர்களிடம் பேசப்படுகின்ற ஒவ்வொரு விஷயமும் இணையத்தில் பெற்றோர்கள் பார்க்கக்கூடிய அளவுக்கு ஒரு வருடம் சேமித்து வைக்கும் செயல்களை செய்திருக்கவேண்டும். ஒரு வருடம் முடிந்த பின்னரும் அதை எங்கிருந்தும் ஒவ்வொரு பெற்றோரும் பார்க்கும் படி செய்யலாம். மூன்று வருடத்துக்கு பின்னர் அதை நீக்கம் செய்யலாம்.

அடுத்ததாக கல்வி முறையில் நிச்சயம் ஐந்தாம் வகுப்பு முதல் பாலியல் கல்வியை சேர்த்தே ஆக வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம். காரணம் இன்று ஒரு குழந்தை ஒன்றாம் வகுப்பில் படிக்கும்போதே பாலியல் சார்ந்த பலவிதமான காணொளிகள் tv மற்றும் பல விதங்களில் காண பெறுகிறார்கள். ஆனால் அந்த வயதில் அதன் முழு அகலம் தெரியாது என்பதால் ஐந்தாம் வகுப்பு முதல் நிச்சயம் இதற்கான கல்வித் திட்டத்தை உருவாக்கியே தீர வேண்டும்.

ஆனால் இதில் பிரச்சனை அனைத்து பெற்றோர்களும் பாலியல் கல்வி என்ற வார்த்தை கேட்டவுடனே "புணர்தல்" அல்லது "penetrative" என்ற விஷயத்தைப் பற்றி தான் யோசிக்கிறார்கள். எடுத்துக்காட்டாக:- உங்களுக்கு உடம்பில் ஒரு பாகத்தில் சொறிவது போல தோன்றினால் உங்கள் கை அதுவாகவே சொறிந்துவிடும். அதற்கு உங்களுக்கு தனிப் பயிற்சி தர வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. அதே போல் தான் இந்த விஷயத்தை ஒரு பூனைக்கும், யானைக்கும், எலிக்கும் தெரிவது போல குழந்தை பெற்றுக் கொள்வார்கள்.

ஆனால் உண்மையில் கற்றுக் கொடுக்க வேண்டிய விஷயம் எப்படி உயிருடன் உடல் கொண்டிருக்கும் நமது காதலன்/லி அல்லது கட்டிய மனைவி / கணவரோடு இதை கையாள வேண்டும் என்பதை தான். எப்படி இன்னொரு உடலின் மேல் வன்முறை செலுத்தாமல் பாதுகாப்புடன், அரவணைப்புடன், அன்புடன், தெளிவுடன், வாஞ்சையுடன், வெறுப்பின்றி கோபம் இல்லாமல் வன்முறையற்ற முறையில் அவர்களுக்குள் இன்பம் துய்க்க முடியும் என்பதை சொல்லி கற்றுக்கொடுக்க வேண்டிய தேவை உள்ளது. உடல் மாற்றங்கள், வலிகள், வேதனைகள் போன்ற அனைத்தையும் கற்பிக்க வேண்டும். அனைத்துக்கும் மேலாக MUTUAL CONSENT என்பதன் பொருளை, அதன் தேவையை, அதன் வரன்முறையை ஒவ்வொரு குழந்தைக்கும் சொல்லி கற்று கொடுக்க வேண்டும்... அனுமதி இல்லாமல் இன்னொருவரின் முடியை கூட தொட கூடாது என்பதை ஆழ் மனதில் பதிப்பிக்க வேண்டும். இன்றைய மாணவர்கள் தானே நாளைய ஆசிரியர்கள்.

இப்படி ஒரு கல்வி கொடுக்காமல் இந்த சமுதாயம் மாறும் என நினைத்தால் அது பகல் கனவு தான்.