Monday 27 November 2017

சென்னை தினம் (மெட்ராஸ் டே) சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற சிறுகதை - முகம்



மழை மேகம் மெதுமெதுவாக ஒன்று சேர தொடங்கிக்கொண்டிருந்தது. காலை முதலே கதிரவன் முகம் காட்டவே இல்லை, நேரம் மணி பத்தை தாண்டி ஓடியதுஅவசரமாக வேலைக்கு போக தயாராகிக்கொண்டிருக்கின்ற நேரத்தில் அவனது நண்பன் கைபேசியில் அழைத்து வரும்போது ஒரு இரண்டாயிரம் ரூபாய் எடுத்துவர சொன்னான்,
வெளியே சுமாராக இருட்டி இருந்தது, மழை பக்கத்து ஊர்களில் எங்கோ பெய்வதை காட்ட நல்லதொரு காற்று ஆவேசமாக ஆடி அடங்கியது, வீட்டிலிருந்து ஒரு பதினைந்து நிமிடத்தில் அவனது அலுவலகத்துக்கு போய் விடலாம், இடைப்பட்ட தூரத்தில் இருக்கின்ற ஒரே ஒரு தானியங்கி பணம் கொடுக்கும் இயந்திரம் ஒரு வாரமாக பணம் இல்லை என்று தான் காட்டுகிறது.

இருச்சக்கர வாகனத்தை இயக்கி அதில் ஏறி அமர்ந்தான். இரண்டுமூணு மழை துளிகள் அங்கங்கே விழுந்தது, வாகனத்தின் வேகத்தை கூட்டி சென்றான், மழையையும் , இயந்திரத்தையும் காரணம் காட்டி பணம் எடுக்காமல் செல்லலாம் என்று யோசித்துக்கொண்டே இயந்திரம் இருக்கும் அந்த வளைவை கடக்க முயற்சிக்கையில் ஏதோ ஒரு நொடி கண்கள்   NO CASH பலகை இல்லாததை கண்டு வண்டியை நிறுத்தினான்.

*****
    எழுபது எழுபத்தைந்து வயது இருக்கலாம். உயிர் இருக்குமா என்று சந்தேகிக்கும் அளவான தேகம்,சூம்பிப்போன கைகளில் ஒரு முடி கூட இல்லை,தலையில் நிலைக்கொள்ளாத தொப்பி, குழி விழுந்த அல்லது விதியின் பயனால் உருவாகி வந்த கன்னக்குழிகள், அதிகபட்சம் ஒரு நாற்பது கிலோ இருக்கலாம், நிச்சயம் இந்த ஆள் இப்போதுத்தான் முதன்முதலாக கால்சட்டை என்ற ஒன்றை அணிந்திருப்பான், இல்லையேல் இவரைப்போல் இரண்டு பேர் உள்ளே செல்லும் அளவிலான சட்டையும், கால்சட்டையும் ஏன்  போடவேண்டும், இந்த லட்சணத்தில் டக்கின் வேறு, மேலிருந்து ஆணையிருக்கலாம், இந்த உடைகள் துவைத்து சில வாரங்களேனும் ஆகியிருக்கும் கண்ணாடியின் வளைந்த நிலை மூக்கில் நில்லாமல் ஒரு காதில் முட்டு கொடுத்து நிறுத்தப்பட்டிருந்தது. மெதுவாக வெளியே இருந்த நாற்காலியை பிரயத்தனப்பட்டு தூக்கிக்கொண்டு படிகளில் ஏற முற்பட்டான் அந்த கிழவன், மர நாற்காலியின் ஒரு கால் ஒடிந்து அதை முள் ஆணியின் உதவியுடன் சேர்த்திருந்தனர்.

மழை கொஞ்சம் கொஞ்சமாக அதிகமானது. இவன் வேகமாக படிகளில் ஏறினான், இவன் வருவதை கண்ட கிழவன் நாற்காலியை தூக்கிக்கொண்டு வழியில் இருந்து தள்ளிநின்றான் . மழை காற்றின் வேகத்தில் சாய்வாக அடிக்க தொடங்கியது. கிழவனின் மேல் மழை பொழிந்தது, இவன் உள்ளே நுழைந்ததும் மீண்டும் கதவை வெளியே இழுத்துப்பிடித்துக்கொண்டு ஒற்றை கையால் நாற்காலியை தூக்கி மெதுவாக உள்ளே வைத்தான் கிழவன். அறையின் குளிரூட்டி இருபத்திரண்டு டிகிரியில் சுழன்றடித்தது. உள்ளே இவனால் ஒரு ரெண்டு நிமிடம் நிற்க முடியவில்லை. கிழவன் வெறித்த கண்களுடன் சுற்றிலும் பார்த்தான். கிழவனை பத்து நிமிடம் உள்ளே நிறுத்தி வைத்தால் ஜீவா சமாதி ஆகிவிடும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது, கிழவன் இவன் மூஞ்சியை பார்க்கவேயில்லை. கண்ணாடி கதவுகளின் ஊடே வெளியே நோக்கி நின்றான், இவனும் பணத்தை எடுத்துவிட்டு வெளியே பார்த்தான். மழை புரட்டி எடுத்துக்கொண்டிருந்தது.

சென்னையில் நாலு துளி விழுந்தாலே நாலு நாள் நாறி விடும். ஊரில் உள்ள எல்லா சாக்கடையும் ரோட்டில் தான் முட்டளவு ஓடும்.காலன் பல இடங்களில் காத்துநிற்பான் ஒவ்வொரு காதளவு தூரத்திலும் பாசக்கயிற்றை எந்த திசையில் நின்று கொண்டும் எவ்வடிவிலும் வீசுவான். எந்த சென்னைவாசியும் ஒரு விவசாயியை போல் , ஒரு கிராமத்தானை போல மழையை பரவசத்துடன் வரவேற்பதே இல்லை. அவர்களை சொல்லியும் குற்றமில்லை பரலோகத்தை அனாயசமாக சென்றடைய பல வழிகளை திறந்தே வைத்துள்ள இடத்தில் . நீர் மேலாண்மையின் மிகப்பெரிய தோல்வியின் உதாரணமான  புதிய சிங்கார சென்னையில் யார் தான் பிரியப்படுவர் மழை என்ற சனியனை.

*****

கிழவன் இங்கு வேலைக்கு வந்த இரண்டாம் நாள் இன்று. சுமார் பத்து நாட்களுக்கு முன்னர் தான் ஒரு பெரிய கடையின் முன்னால் இரண்டு நாள் அமர்ந்திருந்தான். ஒருமுறைக்கூட சாப்பிட்டதாய் தெரியவில்லை. பிச்சையெடுக்கவும் கை உயரவே இல்லை எத்தனையோ முறை எண்ணியபோதும். பின்னர் அந்த கடையில் காவலாளியாக இருந்த முதியவரிடம் ஏதாவது வேலை கிடைக்குமா என்று உடைந்த குரலில் கேட்டபோது அவர் கூட்டிச்சென்ற இடம்தான் தனியார் காவலர் முதலாளியிடம் . ஏற இறங்க பார்த்த அந்த மிலிட்டரிக்காரன் யோவ்...! இவர எதுக்கு கூட்டி வந்த? என்றான் சிரத்தையில்லாமல். இல்ல வேல கேட்டாரு,அதான். உமக்கு வேல தந்ததே பாவம் பாத்து, இந்த வயசில இவர வேலைக்கு சேர்த்து நான் ஆசுபத்திரி செலவும் பார்க்கவாமுடியும்.

கிழவன் மெதுவாக இல்ல ஐயா..! ஒரு வேல இருந்தா கொஞ்சம் உதவியா இருக்கும். கொஞ்சம் இருமிய மிலிட்டரி சரி தான்ஆனா  ஒரு வயசு அளவு உண்டில்லையா? உங்களுக்கு இப்போ எத்தன? எழுபத்தி மூணு என்றான் கிழவன் தரையை பார்த்தப்படிஎந்த ஊரு? வந்தவாசி ஐயா, என்றான் தலையை தூக்காமலே. ஏதாவது அடையாள அட்டை வச்சிருக்கீங்க? கையில் இருந்த பாலிதீன் கவரில் இருந்து கொஞ்சம் கிழிந்த வாக்காளர் அடையாள அட்டையை எடுத்து நீட்டினான். பல விதமான கேள்விகள், பல மௌன பதில்களும் நேர்த்தியான பதில்களும், பல இடங்களில் கிழவனது கைநாட்டு வாங்கப்பட்டது.

அதோ அந்த அறையில ஒரு செட் துணி இருக்கு, இன்னும் பத்து நாளில புது துணி வரும்,அதுவரைக்கும் இத போட்டுக்கோங்க, ஒரு ஷு-வும் அந்த மூலையில இருக்கு அதையும் எடுங்க என்றான் மிலிட்டரி. உடுத்திருந்த அழுக்கு வேட்டியை ஒருமுறை சரி செய்துக்கொண்டே தலையை நிமிர்த்திய கிழவன் மெல்லிய குரலில் சார் சம்பளம் எவ்வளவு குடுப்பீங்க? பாத்துக்கலாம் என்று சொல்லிக்கொண்டே வெளியில் நின்றிருந்த ஒரு வாலிபனை கூப்பிட்டான். டேய் இன்னைக்கு யாராவது லீவு கேட்டிருக்காங்களா? ஆமாண்ணே. அந்த தெருமுக்கு ஹோட்டல்ல ஒரு ஆளு போகணும்னே, அந்த தாத்தா ஊருக்கு போயிட்டாருல்ல, வாறதுக்கு ரெண்டு நாள் ஆகும்.

கிழவன் மெதுவாக நடந்துச்சென்று பக்கத்து அறையில் தொங்கிக்கொண்டிருந்த சட்டை மற்றும் கால்சட்டையை எடுத்தார். சில நாட்கள் யாரோ அதை உடுத்தியுள்ளனர். அதனை எடுத்து மடக்கி வைத்துக்கொண்டு சுற்றும் முற்றும் ஒரு கவரை தேடினார். பழைய செய்திதாள்கள் மட்டும் தான் மூலையில் கிடந்தது. அதில் ஒரு சில தாள்களை எடுத்து இரண்டையும் சுருட்டிக்கொண்டார்பக்கத்தில் தொங்கிய தொப்பியையும் கையில் எடுத்துக்கொண்டு வெளியே வந்தவுடன் மிலிட்டரி வாலிபனை கூப்பிட்டு எலே...! இவர அந்த ஹோட்டல்ல இறக்கிவிட்டு வா. அவன் பெரியவரே போலாமா என்றவாறே இருச்சக்கர வாகனத்தை அமிழ்த்தி ஏற சொன்னான். கிழவன் பதட்டத்துடன் தம்பி ஒரு நிமிஷம் அந்த ஷு' என்றவாறே மீண்டும் உள்ளே விரைந்தார்மூலையில் ஒரு ஷு கொஞ்சம் அல்ல அதி பழசாகவே இருந்தது. சிலந்தி வலை பின்னியிருந்ததை கைகளால் நீக்கிவிட்டு அதை கையில் எடுத்துக்கொண்டே வேகமாக போய் வண்டியில் ஒரு புறமாக ஏறி அமர்ந்தார். வழியில் யாருடனோ பேசிக்கொண்டே தலையை தோளின் மேல் முட்டுக்கொடுத்து கைபேசியில் சிரித்துக்கொண்டே வண்டியை ஓட்டிக்கொண்டு இருந்தான்ஒரு பெரிய கடையின் முன் வண்டி நின்றது. பெரியவரே இங்க தான்அந்த சைடுல ஒரு சீட் போட்ட ஒரு இடம் இருக்கும். நான் போய் கடஓனர்க்கிட்ட சொல்லிட்டு போறேன் என்றவாறு கடை நோக்கி நடந்தான்திரும்பி வந்தவன் மணி இப்போ ரெண்டாக போகுது. ஆறு மணிக்கு தான் டைம், நாளைக்கு காலையில ஆறு மணிக்கு கிளம்புங்கமதியம் சாப்பிட்டீங்களா? இல்லயில்ல... அவனே பதிலும் சொல்லிவிட்டு ஒரு இருபது ரூபாய் தாளை எடுத்து நீட்டிவிட்டு திரும்பினான். கிழவன் ரோட்டோரம் இருந்த சிறு தள்ளுவண்டி டீ-கடை சென்று டீ சொன்னான். டீ யானை பசிக்கு பத்தவேயில்லை. கடையில் வைத்திருந்த பலகாரங்களை பார்த்தார். தம்பி இந்த பிஸ்கட் எவ்வளவு. ஒண்ணு அஞ்சு ருவா... நிதானமாய் அந்த பெரிய குப்பியை திறந்து இரண்டு பிஸ்கட்டை எடுத்து சாப்பிட்டான். பின்னர் கொஞ்சம் தண்ணீரை அங்கிருந்த பிளாஸ்டிக் கேன்-இல் அருந்திவிட்டு கடைக்காரன் மீதி காசுக்கு கொடுத்த இரண்டு நீல நிற மிட்டாயை எடுத்துக்கொண்டு துணி மாற்றும் அறையை நோக்கி நடந்தான். கொஞ்சம் தெம்பாய் இருந்தது. அறை போன்ற இடத்தில் ஒரு ஆள் தான் உள்ளே நிற்க முடியும். கஷ்டப்பட்டு வேண்டுமானால் காலை நீட்டாமல் உட்கார முடியும். சுருட்டி வைத்திருந்த காகிதத்தை பிரித்து துணிகளை முகர்ந்துப்பார்த்தான். மீனை கழுவிய தண்ணீரின் வாசம். கால்சட்டையை மெதுவாக போட தொடங்கினான். அது கிழவனின் இடுப்பை விட இரண்டு மடங்கு பெரிதாக இருந்தது. தடுமாறி இரண்டாவது காலையும் உள்ளே நுழைத்தபோது பெரிய கிணற்றில் விட்ட வாளிப்போல் சூம்பிய காலில் தளதளவென ஆடியபோது. அந்த கால்சட்டையுடன் இணைத்திருந்த பெல்ட் அதை முறுக்கிகட்ட உறுதுணை புரிந்தது, பின்னர் தான் கொண்டுவந்த சட்டையை போட்டான்அதில் வயிறு பாகத்தில் பொத்தானும் இல்லை. தொள தொளவென இருந்த சட்டையை கால்சட்டையின் உள்ளே நுழைத்தான். தொப்பி தலையை விட பெருசாக. அந்த சுவரில் மாட்டியிருந்த விசில், கைத்தடி மற்றும் ஹோட்டல் என்ற தட்டியையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். ஷு போட மறந்தது நியாபகம் வந்ததுஅதை எடுத்துக்கொண்டு வாசலில் உட்கார்ந்தான். அவனின் பரந்து விரிந்த காலைவிட அது சிறியதாகவே இருந்தது. உள்ளே நுழையவேயில்லை. மிகவும் சிரமத்துடன் மீண்டும் முயற்சித்து நோக்கினான். அதில் போட்டிருந்த முடிச்சியையும் அவிழ்க்க முடியாது போல. பல சிரமங்களுக்கு பின் ஒருவழியாக அது காலுக்குள் சென்றது. நடக்க முடியாமல் நடந்து ஹோட்டலின் முன் வந்து முன்னால் இருந்த கேஷியரிடம் கண்ணாடி வழியாக பார்த்து வணக்கம் வைத்தான். கேஷியர் யாரோ ஒருவனை அனுப்பி அவன் அருகில் வந்து நேற்று ஏன் வரவில்லை? என்று கேட்டான். உங்க ஓனர் போன் பண்ணினாலும் எடுக்கல என்று கொஞ்சம் கோபமாக கேட்டுவிட்டு சென்றான். அந்த வாலிபன் உள்ளே சென்று பேசாமல் சென்றிருப்பது புரிந்தது. ஹோட்டல் என்ற தட்டியை எடுத்துக்கொண்டு ரோட்டின் ஓரத்தில் நின்றான். தட்டியை மேலும் கீழுமாய் அசைத்தபடியே.

*****
மொபைல் சிணுங்கியதுகடன் கேட்டவன் டேய்..! எங்க இருக்க? மழை வேற அடிச்சு துவைக்குதுஎப்போ வருவ?  சீக்கிரம் வாடா, ஷிப்ட் முடிச்சு நேரம் நெறைய ஆகுது. கொஞ்சம் நின்னுச்சுன்னா உடனே டூ மினிட்ஸ்-ல வந்திடுறேன் மச்சி என்றவாறே ஏ.டி.எம் அறையில் இருந்து வெளியே வந்தான். நாளைக்கு தீபாவளி, இந்த வருட தீபாவளி நமத்து போய்விடும் போலமழை மீண்டும் காற்றினால் சரிவாய் இவன் நிற்கும் இடத்தை நனைக்க தொடங்கியது. மீண்டும் உள்ளே நுழைந்தான். மழ இந்த அடி அடிக்குது. கிழவன் ம்ம்  என்று முனகினான் இவன் முகத்தை நோக்காமல். இன்னைக்கு பூரா இப்படி அடிச்சுகிட்டே இருந்தா ஊருக்கு எவனும் போகமுடியாது. தீபாவளி சென்னையில தான் கொண்டாடனும். கிழவன் இவன் முகத்தை நோக்கி மெதுவாக ஆமா..! என்றான், கிழவனின் உடல் நடுங்க தொடங்கியிருந்தது தெரிந்தது, அந்த ஏ.சி  யை ஆப் பண்ண வேண்டியது தானே. இல்ல... நான் இப்போ தான் இங்க வந்தேன், அதுவுமில்லாம ஆப் பண்ணகூடாதுன்னு வேற சொல்லியிருக்காங்க.

ஊருக்கு கிளம்பல்லியா? எந்த ஊரு  என கேட்டான் கிழவனிடம். வந்தவாசி. மழையை நோக்கியபடி ஊருக்கு போகல்ல! என்றான். இவனுக்கு ஏன்? என்று கேட்க ஆர்வம் பீறிட்டது. ஆனால் கிழவன் பேச விரும்பவில்லை என தோன்றியதால் அமைதியாகிவிட்டான்.

*****
கடையில் கார்கள் அதிகமாக வருவதும் போவதுமாக இருந்ததால் கிழவன் விரைவிலேயே களைத்துப்போனான். நேரம் இரவு பதினொன்றை தாண்டியிருந்தது. கண்ணாடி வழியே ஒருவன் கோழியின் தொடையை பிய்த்திளுப்பதை வெளியிலிருந்தே தெரிந்தது. பசி காதை அடைத்தது. நேரம் போகப்போக வண்டிகள் குறைந்ததால் கடையை சுத்தபடுத்தும் பணி நடந்தது. நேரம் பனிரெண்டரையை  கடந்திருக்கும். கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு மெதுவாக கண்ணாடி கதவை திறந்து உள்ளே சென்றான் கிழவன், நடத்துனர் போல நின்றிருந்த வெள்ளை சட்டைகாரரிடம் சார்...! சாப்பாடு ஏதாவது கொஞ்சம் இருக்குமா? செக்யூரிட்டிக்கு இங்க சாப்பாடு கிடையாதே! நாங்க அப்படி கொடுக்கிறதும் இல்லையே என்றவாறு  துடைப்பவனிடம் ஏதோ சொல்ல போனவர் திரும்பி ஒரு நிமிஷம் என்று சொல்லி உள்ளே சென்று சிறிது நேரத்தில் ஒரு பொதியை கொண்டு வந்து கிழவனிடம் தந்தான். அதில் கொஞ்சம் பிரைட் ரைஸ்சும், கொஞ்சம் வெள்ளை சோறும் அதன் மேல் கொஞ்சமாக கிரேவியும் ஊற்றபட்டிருந்தது. சாப்பிட்டுவிட்டு கைகளை துணிமாற்றும் அறையின் பக்கத்தில் இருந்த குழாயில் கழுவி அதில் கொஞ்சம் நீரை அருந்தியபின் மீண்டும் படியில் வந்தமர்ந்தான்.

நேரம் மெதுவாக வெள்ளையாகி கொண்டது. கண்ணை மூட பயம். ஏதாவது பிரச்னை வந்தால் இந்த வேலையும் போய்விடும். மணி ஆறுக்கு மேல் ஆகியிருக்கும். எழுந்து நடந்தான், கால் கணுக்காலில் சுள்ளென வலி, தோல் கிழிந்திருப்பது தெரிந்தது. கணுக்கால் வீங்கியும்  இருந்ததுஷுவை கழற்றவே பிரயத்தனப்பட்டான் . பெருவிரலின் ஓரம் உராய்ந்து நீர் வடிந்ததுசிறு விரலலும்  வண்டு கடித்ததை போன்று வீக்கமாக. மறுநாள் மதியம் மீண்டும் பழையது போல் தட்டியை தூக்கி நின்றான். இன்று நேற்று போல் அதிக கார்கள் வரவில்லை. எட்டு மணியை தாண்டியபின் தான் ஒன்றிரண்டு வாகனங்கள் வரத்தொடங்கியது. திடீர் என வண்டிகளை திசைகாட்டி ஒதுக்கும் போது பின்பக்கம் அரண் கம்பியில் ஒரு பெரிய கருப்பு நிற கார் பலமாக மோதியது. படாரென்று வாயிலை திறந்து வந்த இளைஞன் தேவுடியா பயலே விசில் என்ன மயித்துக்கு வச்சிருக்க, ஊத மாட்டியா என்று கத்தினான். கிழவன் இல்ல சார்...! நான் ஊதினேன். நான் செவிடனா தாயளி என்று உறுமினான். கிழவன் கொஞ்சம் சத்தமாக மீண்டும் ஊதினேன் என்றதும் காரை பார்த்து நின்றவன் வேகமாக கோபத்தில் சட்டென ஓங்கி மிதித்தான். மயிரு நியாயம் வேற பேசுறியா ? காரில் இருந்து இன்னொருவன் இறங்கி வந்து தடுமாறி எழப்போன கிழவனின் தலையில் ஓங்கி ஒரு உதைவிட்டான். கிழவன் தலைக்குப்புற மண்ணில் விழுந்தான். மீண்டும் வசைமாரி பொழிந்து கொண்டே இருவரும் மிதிக்க வரும்போது யாரோ தடுத்து விட்டனர். இளைஞர்கள்  தடுமாறிக்கொண்டே வண்டியை எடுத்து சென்றனர். மறுநாள் அங்கு வேண்டாம் என்று சொன்னதாய் சொல்லி மிலிட்டரிகாரனின் சகாய் கிழவனை கூடிச்சென்று ஒரு பெரிய குடோனில் காவல் காக்க சொன்னான். அங்கு இதேபோல் வேறொரு கிழவனும் இருந்தான். இருவரும் நெடுநேரம் பேசவேயில்லைஅங்கு ஒன்பது முதல் தான் டூட்டி. அந்த கிழவன் இரண்டு டூட்டி சேர்த்து பார்க்கிறான் போலும்.

இரவுணவு நேரத்தில் தான் அந்த கிழவன் இந்த கிழவனுக்கு சாப்பாட்டை கொஞ்சம் பங்கு கொடுத்தான். மறுநாள் காலைவரை அவர்கள் பேசிக்கொண்டே இருந்தனர். பணம், காமம், காதல், மரணம், மக்கள், மனைவி, பேரன்கள், விவசாயம், மழையின்மை, சண்டைகள், பட்ட அசிங்கங்கள், விரக்தி மற்றும் சென்னை வந்தடைய பட்ட வேதனைகள் வரை ஒரு கதைசொல்லி போல் மாறி மாறி சிரிக்காமல், அழாமல், யோசிக்காமல்... பேசினர். அன்பு காட்டும் நல்லவர்கள் நெடுநாள் நம்முடன் இருப்பதைவிட ஆத்மார்த்தமான சிநேகத்துடன் ஒரு நாள் நம்முடன் இருந்தாலே நம் மனம் அவர்களை வாழ்நாள் எல்லாம் மீண்டும் அவர்களை காணாவிடினும் அந்த நினைவுகளுடன் வாழும் . அதும் இந்த வயசு காலத்தில் ஒரு அனுசரணையான வார்த்தையே போதும்.

காலையில் தான் இந்த கிழவனுக்கு தெரிந்தது அங்கு கக்கூஸ் இல்லையென்று. அது ஆளே இல்லாத குடோன். பகலில் வண்டி வந்து சாமான்களை கொண்டு செல்லும் என்பதும், கிழவனின் வயறு கலங்க தொடங்கியதுஅந்த கிழவன் அரை கிலோமீட்டர் நடந்து சென்று ஒரு சிறு மறைவான சாக்கடை ஓரம் போக சொன்னான். கிழவன் அங்கே சென்று அமர்ந்துவிட்டு சாக்கடையில் கொஞ்சம் தெளிந்து ஓடும் இடத்தில் கழுவிவிட்டு மீண்டும் திரும்பினான். அங்கு சுமார் ஒரு வாரம் காவல் காத்துவிட்டு நேற்று இரவு தான் இந்த ஏ.டி.எம் முன் நிற்க சொன்னார்கள். நேற்று முன்தினம் அந்த கிழவன் வேலைக்கு வரவில்லைமதியம் சாப்பிட இருந்த நேரம், ஒரு மூன்று வாய் தான் சாப்பாடு போயிருக்கும் முதலாளி வந்துவிட்டார். அப்படியே போட்டுவிட்டு போய் கதவை திறந்து அவர் போவது வரை சுமார் அரைமணிநேரம் கூட இருந்துவிட்டு திரும்பி வந்து பார்த்தால், நாய் தின்று ஏப்பம் விட்டுக்கொண்டு நின்றிருந்ததுநேற்று பகல் மொத்தம் ஒரு டீ, இரண்டு வாழை பழம் ஒரு கட்டு பீடியுடன் கழிந்தது.
*****
மழை கொஞ்சம் வெளியே குறைய தொடங்கியது. கிழவன் இயந்திரத்தின் ஓரத்தில் ஒதுக்கிவைத்திருந்த  ஒரு மஞ்சள் பையில் இருந்து ஒரு பீடியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்மழை முற்றாய் நின்றதுஇவன் வாகனத்தை எடுத்து ஆபீஸ் நோக்கி புறப்பட்டான்கிழவனின் நினைவு புகையுடன் குடோனில் வேலை பார்க்கும் கிழவனை நினைத்தது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அன்பால, எந்த பொறாமையும் இல்லாத இயலாமையினால் பேசிக்கொண்டிருந்த நாட்கள். கடைசிவரை இருவரும் பெயர்களை கேட்டுக்கொள்ளாமல்.

ஆபீசை அடைந்தவன் நண்பனை கண்டு காசை கொடுத்துவிட்டு தீபாவளி வாழ்த்தை அனைவரிடமும் சொல்லி சிரிப்புடன் மதியம் ஒரு மணி வரை கடத்தினான். மீண்டும் வெளியே மழை பேய் போல் இடியின் சத்தத்துடன் பக்கத்தில் நிற்பவரை கூட பார்க்க முடியாத அளவு பெய்து முடித்திருந்தது. அரைநாள் விடுப்பு சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பினான். பணம் எடுத்த ஏ.டி.எம்  இருக்கும் இடத்தை தாண்டி ஒரு நூறு மீட்டர் தூரத்தில் பத்திருபது பேர் நின்றிருந்தனர். ஒரு போலீஸ் வாகனம் மற்றும் ஒரு கார் ஓரத்தில் நின்றது. கடந்து செல்லும்போது ஒரு நொடி கீழே பார்த்தான்அதே கிழவன் தலையிலும், மூக்கிலும் ரத்தம் ஓடிய அடையாளங்களுடன். மழை நீரிலும் ரத்தம் கொஞ்ச தூரம் ஓடியுள்ளது. கையில் இருந்த குஸ்கா சிதறியும் கை கெட்டியாக கவரை  பிடித்தப்படியே படுத்திருந்தார். இவனது வண்டி நேராக சென்றது.    

**********************************************************

 இக்கதையுடன் தேர்வு செய்யப்பட்ட கதைகளையும் கிழக்கு பதிப்பகம் புத்தகமாக வெளியிட்டுள்ளது. அந்த புத்தகத்தை வாங்க இணையத்தளம் :-

புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் |044 49595818 | 9445901234 | 9500045609