Monday 1 November 2021

டாட்டா வாங்கிய ஏர் இந்தியா... ஜனநாயகத்தின் மனசாட்சியை உலுக்காதது ஏன்...?


 

உண்மையில் இந்தியாவில் இருக்கின்ற நடுநிலைவாதிகள் முதல் ஏதாவது ஒரு “இஸம்” மேல் பற்றுள்ளவர்கள் வரை யாருமே அதை பற்றி கொஞ்சம் கூட வருந்தவுமில்லை அதை பற்றிய ஒரு சிறு முணுமுணுப்பை கூட பெரிய அளவில் எங்கும் காண முடியவில்லை. காரணம் மிக எளிதாக புரிந்துகொள்ள முடிந்ததாக நாம் உருவாக்கிய கற்பனை பிம்பம் தான். உண்மையில் விற்றது சரியா? அல்லது எடுத்தவர்களிடமே திரும்ப அந்த நிறுவனம் சென்றது உண்மையில் விதி வலியதன் காரணமாகவா? அல்லது நம்மை போன்ற இந்த தலைமுறை ஆட்களுக்கு, அதை புரிந்துக்கொள்ளும் தகுதி மற்றும் நேரம் இல்லையா?
 
ஒரு புறம் பல செய்தி ஊடகங்கள் சொன்ன விஷயம் அது டாட்டாவிடம் இருந்து அரசு தன் வலிமையை பிரயோகித்து நேரு காலத்தில் தன்வசப்படுத்திய நிறுவனம். அதனால் இப்போது அது திரும்ப நல்லவரான டாட்டாவிடமே சென்றது ஒருவிதத்தில் நல்லது என்பது போலவும்.
 
இன்னொரு எல்லையில் ஆளும் மத்திய அரசின் கொள்கை விளம்பிகள் டாட்டாவுக்கு நேரு செய்த துரோகத்தை இதன் மூலம் மோடி சரி செய்து நாட்டு மக்களுக்கு புண்ணியத்தின் பங்கை சம்பாதித்து கொடுத்துள்ளதாக சொல்கிறார்கள். 
 
உண்மையில் இது யாருடைய சொத்து? இப்போதைய அரசு உருவாக்கிய நிறுவனமா? அல்லது இப்போதைய அல்லது முன் காலத்தில் இருந்த மந்திரிகள் உருவாக்கிய நிறுவனமா? அல்ல... இது மக்களின் வரிப்பணம் மூலம் வாங்கப்பட்ட விமானங்கள் மற்றும் கடைசி மனிதன் வரை கொடுத்த சிறிய சிறிய அளவிலான வரிபணத்தின் மூலம் உருவாகி வந்த ஒரு ஸ்தாபனம்.
ஆனால் அதை மிக மிக மிக சொற்ப என்பதை விட இலவசமாகவே கொடுத்திருப்பதை கூட பற்றி வருத்தப்படாத நம்மை என்ன சொல்வது.
 
கொஞ்சம் தீர்க்கமாக பார்போம்:-
மத்திய அரசின் அறிவிப்பு படியே வைத்துகொண்டால் கூட ஏர் இந்திய நிறுவனத்துக்கு ஐம்பதாயிரம் கோடி ரூபாய்க்கான சொத்துமதிப்பு உள்ள நிறுவனமாகும். அதேநேரம் சுமார் அறுபத்தி இரண்டாயிரம் கோடி ருபாய் அளவுக்கு இப்போதைக்கு கடனும் உள்ளது.
 
உண்மையில் இந்த கடன் தொகையான அறுபத்தி இரண்டாயிரம் கோடி ரூபாயை தாங்களே அடைத்துக்கொள்வதாக இப்போது டாட்டா ஏற்றுள்ளதா? இல்லை.
 
சரி, அப்படி செய்யாமல் அந்த நிறுவனத்தின் சொத்துமதிப்பான ஐம்பதாயிரம் கோடி ரூபாயையேனும் கொடுத்து தான் இப்போது டாட்டா இதை வாங்கி உள்ளதா? இல்லவே இல்லை.
 
ஆனால் உண்மையில் டாட்டா நிறுவனம் அரசுக்கு கொடுத்துள்ளது வெறும் இரண்டாயிரத்து ஏழுநூறு கோடிகள் மட்டுமே.
 
அதேபோல் அறுபத்தி இரண்டாயிரம் கோடி ருபாய் அளவுக்கு இப்போதைக்கு இருக்கும் கடனை வரும் காலத்தில் தீர்க்குமா என்று பார்த்தால்...?????
அதற்கு அவர்கள் சொல்லும் பதில் பதினைந்தாயிரத்து முந்நூறு கோடி ரூபாயை டாட்டா கொடுக்கும். ஆனால் அதையும் இந்த வானூர்திகளை வைத்து பிழைத்துக்கொண்டே அதில் லாபம் வந்தால் அதில் சிறுக சிறுக கொடுத்து தான் இந்த பதினைந்தாயிரத்து முந்நூறு கோடி ரூபாயை ஈடு கட்ட போகிறார்களாம். மீதி நாற்பத்தி ஆறாயிரம் கோடி ரூபாயை பற்றி பின்னர் சொல்கிறேன்.
இது தான் இப்போது அரசு ஏற்படுத்தி உள்ள ஒப்பந்தம். இதை கேட்டால் எதை கொண்டு சிரிப்பது என்பது தான் உண்மையில் புரியவில்லை. இந்த ஒப்பந்தம் சரி என்று எந்த கணக்கு தெரிந்தவனாவது ஒத்துக்கொள்வானா. ஆனால் இப்போது நமக்கு வாய்த்திருக்கும் வணிக அடிமைகள் செய்வார்கள். செய்கிறார்கள். நாம் கையால் ஆகாமல் பார்த்து நொந்துக்கொண்டு மட்டுமே உள்ளோம்.
 
இதே அரசு அதாவது இப்போது இருக்கின்ற மத்திய அரசு 2௦17-18 ஆம் வருடத்தில் இதை விற்க யோசிக்கும்போது ஒரு முன்வரைவை உருவாக்கியது. அதில் ஏர் இந்திய நிறுவனத்தின் பங்கை நூறு சதவிகிதம் விற்க நினைக்கவில்லை. இருபத்தி நாலு சதவிகித பங்கை வைத்துக்கொண்டு மீதியை மட்டுமே விற்கலாம் என்று யோசித்தது. அதேப்போல் அன்று இருந்த கடனின் அளவிலிருந்து சுமார் முப்பத்தி நாலாயிரம் கோடி ரூபாயை வாங்கும் நிறுவனம் ஏற்க வேண்டும் என்றும் ஒரு சரத்தை வைத்திருந்தது. அப்போது ஒருவர் கூட வாங்க முன்வரவில்லை. ஏன், இந்த டாட்டா கூட அந்த திசையில் அப்போது தலை வைத்து படுக்கவில்லை.
 
இதை எல்லாம் தாண்டி ஒரு விஷயம் இருப்பது தான் உண்மையில் இந்திய மக்களின் தலையில் மிளகாய் அரைப்பதின் உச்சம். அதாவது இந்த அறுபத்தி இரண்டாயிரம் கோடி ருபாய் கடனில் சிறுக சிறுக விமானம் ஓட்டி அதை வைத்து அடைப்பதாக சொல்லிய அந்த பதினைந்தாயிரத்து முந்நூறு கோடி ரூபாயை தவிர மீதி உள்ள சுமார் நாற்பத்தி ஆறாயிரம் கோடி ரூபாயை நம் மக்கள் பணத்தில் கடனை கழிக்க வேண்டும்.
 
 நம் வரிபணத்தின் மூலம்...
 எவ்வளவு நல்ல டீல் இது??? அக்காவை வைத்து பேக்கரி வாங்கியதை விட ஒரு கேவலமான இந்த டீலை நாம் என்னவென்று சொல்வது.
 
சரி. இந்த கேவலமான கதையின் மறுபக்கத்தையும் கொஞ்சம் பார்ப்போம். ஏர் இந்தியா அப்படி ஒரு மட்டமான கம்பெனி தானா இப்போது?
 
உண்மையில் ஏர் இந்தியாவின் வசம் சுமார் நூற்றி முப்பதுக்கும் மேற்பட்ட விமானங்கள் உள்ளது. அதாவது உலகத்தின் பெரிய நிறுவனங்களில் வரிசையில் உள்ளது தான் இப்போதும். இரண்டாவது மன்மோகன்சிங் ஆட்சியில், அதாவது 2௦௦7 வருடங்களில் தான் இந்த நிறுவனம் இவ்வளவு கீழாக செல்ல தொடங்கியது என்னவோ உண்மை தான். அப்போது வாங்கிய பல விமானங்களின் மூலம் ஏற்பட்ட கடனை மீட்ட முடியாமல் தான் அந்த நிறுவனம் திணறியது. 
 
இதில் முக்கிய திருப்பம் இப்போது நடந்தது என்னவென்றால் அப்படி இந்திய அரசு கடன் எடுத்து வாங்கிய விமானங்கள் இப்போது டாடாவுக்கு இலவசமாகவே அரசு கொடுத்துள்ளது. மீதி கடன் காசையும் கொடுப்பது அரசு தான், நம் வரிப்பணம் மூலம்.
 
நீங்கள் எந்த கட்சி ஆளாக இருந்தாலும் இது சரி என்று சொல்ல முடியுமா?
சரி கொஞ்சம் வரலாற்றை திருப்பி பார்த்தோமானால் இந்த டாட்டா விமான நிறுவனம் தொடங்கிய வருடம் 1932-ம் வருடம்தான். ஆனால் அதை அரசுடமை ஆக்கிய வருடம் 1953-ஆம் ஆண்டு. அந்த வருடம் அரசு இதை கையப்படுத்தும் போது உண்மையில் அதில் டாடாவுக்கு வெறும் இருபத்தி ஐந்து சதவிகித பங்கு தான் உண்மையில் இருந்தது. அப்போதே அரசுக்கு நாற்பத்தி ஒன்பது சதவிகித பங்கு இருந்தது. அரசு அதை கையகப்படுத்தும்போது அரசு அப்போதைய மதிப்பில் டாட்டாவின் பங்குகளை சுமார் 2.8 கோடி ரூபாய் கொடுத்து தான் வாங்கியது. அல்லாமல் அரசு பலவந்தமாக கைப்பற்றவில்லை. ஆனால் அப்படி தான் நாம் நம்பிக்கொண்டு திரிகிறோம்.
 
அரசு அப்போது ஏன் அதை வாங்கியது என்றால் அப்போது உலகம் முழுவதும் புதிதாக விடுதலை பெற்ற பல நாடுகளும் சொந்தமாக ஒரு விமான நிறுவனம் நிறுவி நடத்துவதை ஒரு தேசிய பெருமிதமாக நினைத்துக்கொண்டிருந்த காலம் அது.
 
இப்போது சொல்லுங்கள் அரசு உண்மையில் செய்ய வேண்டியது சேவையா, வணிகமா என்பது ஒருபுறம் யோசித்துக்கொண்டே...
 
மறுபுறம் கொஞ்சம் பரந்துபட்டு யோசித்தால்... டாடாவுக்கு முன்னமே இரண்டு வானூர்தி சேவை நிறுவனங்கள் இருக்கின்றது ஏர் ஆசியா மற்றும் ஏர் விஸ்தார என்ற பெயரில்... அவை லாபத்தில் தான் இயங்குகின்றதா என்ற கேள்வியை நாம் ஒருமுறையேனும் யோசித்தோமா... அப்படி என்றால் இதை அவர்கள் ஏன் இப்போது வாங்கினார்கள்? ஏன் 2௦17-இல் வாங்க முன்வரவில்லை? 
 
இப்போது இலவசம்... போனால் போகட்டும் போடா... என்று வாங்கி வைத்துக்கொள்கிறார்கள்.
 
மறுபுறம் நம்மை போன்ற இளிச்சவாயன்களும், பான்பிராக் வாயன்களும்...
வாழிய நாடு...! வாழ்க எம்மக்கள்...!