Showing posts with label Peoples. Show all posts
Showing posts with label Peoples. Show all posts

Monday, 1 November 2021

டாட்டா வாங்கிய ஏர் இந்தியா... ஜனநாயகத்தின் மனசாட்சியை உலுக்காதது ஏன்...?


 

உண்மையில் இந்தியாவில் இருக்கின்ற நடுநிலைவாதிகள் முதல் ஏதாவது ஒரு “இஸம்” மேல் பற்றுள்ளவர்கள் வரை யாருமே அதை பற்றி கொஞ்சம் கூட வருந்தவுமில்லை அதை பற்றிய ஒரு சிறு முணுமுணுப்பை கூட பெரிய அளவில் எங்கும் காண முடியவில்லை. காரணம் மிக எளிதாக புரிந்துகொள்ள முடிந்ததாக நாம் உருவாக்கிய கற்பனை பிம்பம் தான். உண்மையில் விற்றது சரியா? அல்லது எடுத்தவர்களிடமே திரும்ப அந்த நிறுவனம் சென்றது உண்மையில் விதி வலியதன் காரணமாகவா? அல்லது நம்மை போன்ற இந்த தலைமுறை ஆட்களுக்கு, அதை புரிந்துக்கொள்ளும் தகுதி மற்றும் நேரம் இல்லையா?
 
ஒரு புறம் பல செய்தி ஊடகங்கள் சொன்ன விஷயம் அது டாட்டாவிடம் இருந்து அரசு தன் வலிமையை பிரயோகித்து நேரு காலத்தில் தன்வசப்படுத்திய நிறுவனம். அதனால் இப்போது அது திரும்ப நல்லவரான டாட்டாவிடமே சென்றது ஒருவிதத்தில் நல்லது என்பது போலவும்.
 
இன்னொரு எல்லையில் ஆளும் மத்திய அரசின் கொள்கை விளம்பிகள் டாட்டாவுக்கு நேரு செய்த துரோகத்தை இதன் மூலம் மோடி சரி செய்து நாட்டு மக்களுக்கு புண்ணியத்தின் பங்கை சம்பாதித்து கொடுத்துள்ளதாக சொல்கிறார்கள். 
 
உண்மையில் இது யாருடைய சொத்து? இப்போதைய அரசு உருவாக்கிய நிறுவனமா? அல்லது இப்போதைய அல்லது முன் காலத்தில் இருந்த மந்திரிகள் உருவாக்கிய நிறுவனமா? அல்ல... இது மக்களின் வரிப்பணம் மூலம் வாங்கப்பட்ட விமானங்கள் மற்றும் கடைசி மனிதன் வரை கொடுத்த சிறிய சிறிய அளவிலான வரிபணத்தின் மூலம் உருவாகி வந்த ஒரு ஸ்தாபனம்.
ஆனால் அதை மிக மிக மிக சொற்ப என்பதை விட இலவசமாகவே கொடுத்திருப்பதை கூட பற்றி வருத்தப்படாத நம்மை என்ன சொல்வது.
 
கொஞ்சம் தீர்க்கமாக பார்போம்:-
மத்திய அரசின் அறிவிப்பு படியே வைத்துகொண்டால் கூட ஏர் இந்திய நிறுவனத்துக்கு ஐம்பதாயிரம் கோடி ரூபாய்க்கான சொத்துமதிப்பு உள்ள நிறுவனமாகும். அதேநேரம் சுமார் அறுபத்தி இரண்டாயிரம் கோடி ருபாய் அளவுக்கு இப்போதைக்கு கடனும் உள்ளது.
 
உண்மையில் இந்த கடன் தொகையான அறுபத்தி இரண்டாயிரம் கோடி ரூபாயை தாங்களே அடைத்துக்கொள்வதாக இப்போது டாட்டா ஏற்றுள்ளதா? இல்லை.
 
சரி, அப்படி செய்யாமல் அந்த நிறுவனத்தின் சொத்துமதிப்பான ஐம்பதாயிரம் கோடி ரூபாயையேனும் கொடுத்து தான் இப்போது டாட்டா இதை வாங்கி உள்ளதா? இல்லவே இல்லை.
 
ஆனால் உண்மையில் டாட்டா நிறுவனம் அரசுக்கு கொடுத்துள்ளது வெறும் இரண்டாயிரத்து ஏழுநூறு கோடிகள் மட்டுமே.
 
அதேபோல் அறுபத்தி இரண்டாயிரம் கோடி ருபாய் அளவுக்கு இப்போதைக்கு இருக்கும் கடனை வரும் காலத்தில் தீர்க்குமா என்று பார்த்தால்...?????
அதற்கு அவர்கள் சொல்லும் பதில் பதினைந்தாயிரத்து முந்நூறு கோடி ரூபாயை டாட்டா கொடுக்கும். ஆனால் அதையும் இந்த வானூர்திகளை வைத்து பிழைத்துக்கொண்டே அதில் லாபம் வந்தால் அதில் சிறுக சிறுக கொடுத்து தான் இந்த பதினைந்தாயிரத்து முந்நூறு கோடி ரூபாயை ஈடு கட்ட போகிறார்களாம். மீதி நாற்பத்தி ஆறாயிரம் கோடி ரூபாயை பற்றி பின்னர் சொல்கிறேன்.
இது தான் இப்போது அரசு ஏற்படுத்தி உள்ள ஒப்பந்தம். இதை கேட்டால் எதை கொண்டு சிரிப்பது என்பது தான் உண்மையில் புரியவில்லை. இந்த ஒப்பந்தம் சரி என்று எந்த கணக்கு தெரிந்தவனாவது ஒத்துக்கொள்வானா. ஆனால் இப்போது நமக்கு வாய்த்திருக்கும் வணிக அடிமைகள் செய்வார்கள். செய்கிறார்கள். நாம் கையால் ஆகாமல் பார்த்து நொந்துக்கொண்டு மட்டுமே உள்ளோம்.
 
இதே அரசு அதாவது இப்போது இருக்கின்ற மத்திய அரசு 2௦17-18 ஆம் வருடத்தில் இதை விற்க யோசிக்கும்போது ஒரு முன்வரைவை உருவாக்கியது. அதில் ஏர் இந்திய நிறுவனத்தின் பங்கை நூறு சதவிகிதம் விற்க நினைக்கவில்லை. இருபத்தி நாலு சதவிகித பங்கை வைத்துக்கொண்டு மீதியை மட்டுமே விற்கலாம் என்று யோசித்தது. அதேப்போல் அன்று இருந்த கடனின் அளவிலிருந்து சுமார் முப்பத்தி நாலாயிரம் கோடி ரூபாயை வாங்கும் நிறுவனம் ஏற்க வேண்டும் என்றும் ஒரு சரத்தை வைத்திருந்தது. அப்போது ஒருவர் கூட வாங்க முன்வரவில்லை. ஏன், இந்த டாட்டா கூட அந்த திசையில் அப்போது தலை வைத்து படுக்கவில்லை.
 
இதை எல்லாம் தாண்டி ஒரு விஷயம் இருப்பது தான் உண்மையில் இந்திய மக்களின் தலையில் மிளகாய் அரைப்பதின் உச்சம். அதாவது இந்த அறுபத்தி இரண்டாயிரம் கோடி ருபாய் கடனில் சிறுக சிறுக விமானம் ஓட்டி அதை வைத்து அடைப்பதாக சொல்லிய அந்த பதினைந்தாயிரத்து முந்நூறு கோடி ரூபாயை தவிர மீதி உள்ள சுமார் நாற்பத்தி ஆறாயிரம் கோடி ரூபாயை நம் மக்கள் பணத்தில் கடனை கழிக்க வேண்டும்.
 
 நம் வரிபணத்தின் மூலம்...
 எவ்வளவு நல்ல டீல் இது??? அக்காவை வைத்து பேக்கரி வாங்கியதை விட ஒரு கேவலமான இந்த டீலை நாம் என்னவென்று சொல்வது.
 
சரி. இந்த கேவலமான கதையின் மறுபக்கத்தையும் கொஞ்சம் பார்ப்போம். ஏர் இந்தியா அப்படி ஒரு மட்டமான கம்பெனி தானா இப்போது?
 
உண்மையில் ஏர் இந்தியாவின் வசம் சுமார் நூற்றி முப்பதுக்கும் மேற்பட்ட விமானங்கள் உள்ளது. அதாவது உலகத்தின் பெரிய நிறுவனங்களில் வரிசையில் உள்ளது தான் இப்போதும். இரண்டாவது மன்மோகன்சிங் ஆட்சியில், அதாவது 2௦௦7 வருடங்களில் தான் இந்த நிறுவனம் இவ்வளவு கீழாக செல்ல தொடங்கியது என்னவோ உண்மை தான். அப்போது வாங்கிய பல விமானங்களின் மூலம் ஏற்பட்ட கடனை மீட்ட முடியாமல் தான் அந்த நிறுவனம் திணறியது. 
 
இதில் முக்கிய திருப்பம் இப்போது நடந்தது என்னவென்றால் அப்படி இந்திய அரசு கடன் எடுத்து வாங்கிய விமானங்கள் இப்போது டாடாவுக்கு இலவசமாகவே அரசு கொடுத்துள்ளது. மீதி கடன் காசையும் கொடுப்பது அரசு தான், நம் வரிப்பணம் மூலம்.
 
நீங்கள் எந்த கட்சி ஆளாக இருந்தாலும் இது சரி என்று சொல்ல முடியுமா?
சரி கொஞ்சம் வரலாற்றை திருப்பி பார்த்தோமானால் இந்த டாட்டா விமான நிறுவனம் தொடங்கிய வருடம் 1932-ம் வருடம்தான். ஆனால் அதை அரசுடமை ஆக்கிய வருடம் 1953-ஆம் ஆண்டு. அந்த வருடம் அரசு இதை கையப்படுத்தும் போது உண்மையில் அதில் டாடாவுக்கு வெறும் இருபத்தி ஐந்து சதவிகித பங்கு தான் உண்மையில் இருந்தது. அப்போதே அரசுக்கு நாற்பத்தி ஒன்பது சதவிகித பங்கு இருந்தது. அரசு அதை கையகப்படுத்தும்போது அரசு அப்போதைய மதிப்பில் டாட்டாவின் பங்குகளை சுமார் 2.8 கோடி ரூபாய் கொடுத்து தான் வாங்கியது. அல்லாமல் அரசு பலவந்தமாக கைப்பற்றவில்லை. ஆனால் அப்படி தான் நாம் நம்பிக்கொண்டு திரிகிறோம்.
 
அரசு அப்போது ஏன் அதை வாங்கியது என்றால் அப்போது உலகம் முழுவதும் புதிதாக விடுதலை பெற்ற பல நாடுகளும் சொந்தமாக ஒரு விமான நிறுவனம் நிறுவி நடத்துவதை ஒரு தேசிய பெருமிதமாக நினைத்துக்கொண்டிருந்த காலம் அது.
 
இப்போது சொல்லுங்கள் அரசு உண்மையில் செய்ய வேண்டியது சேவையா, வணிகமா என்பது ஒருபுறம் யோசித்துக்கொண்டே...
 
மறுபுறம் கொஞ்சம் பரந்துபட்டு யோசித்தால்... டாடாவுக்கு முன்னமே இரண்டு வானூர்தி சேவை நிறுவனங்கள் இருக்கின்றது ஏர் ஆசியா மற்றும் ஏர் விஸ்தார என்ற பெயரில்... அவை லாபத்தில் தான் இயங்குகின்றதா என்ற கேள்வியை நாம் ஒருமுறையேனும் யோசித்தோமா... அப்படி என்றால் இதை அவர்கள் ஏன் இப்போது வாங்கினார்கள்? ஏன் 2௦17-இல் வாங்க முன்வரவில்லை? 
 
இப்போது இலவசம்... போனால் போகட்டும் போடா... என்று வாங்கி வைத்துக்கொள்கிறார்கள்.
 
மறுபுறம் நம்மை போன்ற இளிச்சவாயன்களும், பான்பிராக் வாயன்களும்...
வாழிய நாடு...! வாழ்க எம்மக்கள்...!

Sunday, 15 August 2021

குழந்தைகள் மீதான வன்முறைகள் மற்றும் பாலியல் அத்துமீறல்கள்

 

CHILD abuse and TN education system:

பள்ளிக்கல்வித்துறை மாற்றி சிந்திக்க வேண்டிய சரியான தருணம் இதுதான்...

பழையகால கல்வி வழிமுறைகளை தூக்கிப் போட வேண்டிய சரியான நேரம் இது. அதற்கு கரோனா ஒரு காரணமாகவும் பல பள்ளிகளில் நடக்கின்ற பாலியல் அத்துமீறல்கள் ஒரு காரணமாகவும் கொண்டு இப்போதே அரசும் ஒவ்வொரு பெற்றோர்களும் இதன் தேவையை முதலில் உணர வேண்டும்.

இந்த தகவல் புரட்சி யுகத்தில் மிகப்பிரம்மாண்டமான கட்டிடங்களை வைத்துக்கொண்டு பள்ளி நடத்துவதை முதலில் மாற்றியே தீர வேண்டும் இரண்டாவதாக மனித உடல்களை பற்றி மனித உணர்வுகளை பற்றி மனித வாழ்க்கை முறையை பற்றி எந்த ஒரு குழந்தையும் கல்லூரி முடியும் காலம்வரை உணர வழி முறைகள் இந்த பாடத்திட்டங்களில் இல்லை. அதன் காரணமாக பல்வேறு வாழ்க்கைப் பிரச்சினைகளையும் ஒவ்வொரு மாணவ/மாணவியரும் பள்ளி காலகட்டங்களை முடித்து வெளியே வரும்போது எதிர்கொள்கிறார்கள்.

அரசு உடனடியாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்தே தீர வேண்டும். எந்த மத நிறுவனங்களும், சாதிகளும் ஒரு பள்ளியை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட கூடாது. ஒருகாலத்தில் அதன் தேவை இருந்தது.இப்போது தேவையில்லை. ஒரு மாணவி இன்று குறைந்தபட்சம் 6 லிருந்து 10 முறை கடவுள் சம்பந்தமான பாடல்கள், பிரார்த்தனைகள் போன்ற மூடநம்பிக்கையை மட்டும் வளர்த்துகின்ற விடயங்கள் இன்று பள்ளிகளில் தேவையின்றி கட்டாயத்தின் பேரில் அனுபவிக்க வேண்டிய நிலையில் இருக்கிறாள். எந்த மதத்தை சார்ந்த பள்ளியில் சேர்ந்து படித்தாலும் ஒரு அடிமையை நடத்துவதைவிட கீழ்தரமாகவே ஒரு மாணவன் அல்லது மாணவி கடவுள் என்ற பெயரில் நடத்தப்படுகிறார்கள். பள்ளிக்கூடங்கள் அதற்கான இடம் அல்ல.

அவர்கள் கடவுளை பற்றி சொந்த வீடுகளில் வேண்டுமானால் கற்றுக்கொள்ளட்டும். ஒரு மாண- வன் /வி க்கு என்று எந்த ஒரு குரலும் பள்ளிக்கூடங்களில் ஒலிப்பதற்கு அல்லது அவர்களது சந்தேகங்களை / குறைகளை முறைப்படி ஆராய்ந்து தீர்ப்பதற்கு ஒரு வழிமுறையும் இல்லை என்பதை மீறி சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும் என மிரட்டவும் செய்கிறார்கள்.

இதில் மிக கொடூரமான நிலை என்னவென்றால் பி டி ஏ (PTA) என்ற பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் என்ற ஒரு அமைப்பை பள்ளிக்கூடங்கள் வைத்திருந்தாலும் அதன் பயன் என்ன என்பது இதுவரை யாரும் கண்டடைந்தது கிடையாது. காரணம் அது யாருக்காக வை க்கப்பட்டு இருக்கிறதோ அவர்கள் அதில் பங்குதாரர்கள் அல்ல அல்லது கருத்து கூற அல்லது கூறுகின்ற கருத்துக்கு எந்த மரியாதையும் இல்லை.

Ex:- ஒரு திருமணத்தை பெற்றோர்கள் சேர்ந்து முடிவெடுத்து நடத்தினாலும் இப்போதைய நடைமுறையில் குறைந்தபட்சம் பிடித்திருக்கிறதா என்ற ஒரு கேள்வியாவது இந்த சமுதாயம் இப்போது அந்த ஆண்/பெண்ணிடம் கேட்கிறது. ஆனால் குழந்தைக்கு அந்த பள்ளியில் என்ன பிரச்சனை என்று பொதுவெளியில், வீட்டில், பள்ளிக்கூடத்தில் எங்குமே யாருமே கேட்பதில்லை கேட்பதற்கான உரிமையும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. பிள்ளைகளுக்கான அனைத்து முடிவுகளும் தாங்கள் சரியாகத்தான் எடுக்கிறோம் என நம்புகின்ற ஆசிரியர்கள் ஒருபுறம், மறுபுறம் கட்டிய பணத்துக்கு தேவையான பணம் சம்பாதிக்கும் வசதியான விஷயங்கள் மட்டும் தான் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுத்தால் போதும் அது தான் தேவை என்று நம்புகிற பெற்றோர்கள் மறுபுறம் இருப்பதால் எந்த ஒரு மாணவனும் அவனுக்குத் தேவையான சந்தேகங்களை, உணர்வுகளை, பிரச்சனைகளை, கற்பனைகளை, திட்டங்களை எதையும் கேட்பதற்கு ஒரு காது இல்லாத ஒரு சூழ்நிலையில் வாழுகிறான்.

இப்படி ஒரு இக்கட்டில் இருக்கின்ற மாணவன் அல்லது மாணவி வகுப்பில் ஏற்படுகின்ற எந்த பிரச்சனையை பத்தாம் வகுப்பு வரைக்கும் யாரிடம் பேசி புரிய வைக்க முடியும். எந்த விதமான விளக்கங்களை கொடுத்து பெற்றோர்களை நம்பவைக்க முடியும்.

எடுத்துக்காட்டாக:- ஒரு ஆசிரியர் ஒரு மாணவியின் நெஞ்சை கசக்கி விட்டால் அதை எப்படி முயன்றாலும் ஒரு குழந்தையால் அதை நிரூபிக்க முடியாது. காரணம் அதற்கு அவள் தான் ஒரே சாட்சி. இப்படியான விஷயங்களை பொது வெளியில் பேசுவதற்கு முதலில் பெற்றோர்களும் அஞ்சுகிறார்கள். பெற்றோர்களிடமும் சொல்லி இதை தடுப்பதற்கு வழி முறைகள் என்று எதுவுமே இல்லாத ஒரு கல்வி பின்புலத்திலிருந்து மாணவிகளை காப்பாற்றுவது சாதாரணமான விஷயமல்ல.

ஆனால் அரசு இதற்கு மிக எளிதான தீர்வுகளைக் கண்டறிய முடியும். பள்ளிக்கூடங்கள் அனைத்துமே பத்து முதல் ஆயிரம் மாணவர்களை இணையம் மூலம் இணைத்து இன்று தகவல் புரட்சி யுகத்தில் அனைத்துமே அவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே கற்பிக்க முடியும். ஒரு நாளில் குறைந்தபட்ச நேர ஒதுக்கீடு செய்து மற்ற நேரங்களில் பலவிதமான விஷயங்களில் ஒரு மாணவ மாணவியரை பங்களிக்க வைக்க முடியும். செய்முறை பயிற்சி என்பது மிக தேவையான ஒன்று என்பதால் அதை கற்பிப்பதற்கு அரசு மாவட்டத்தின் பல இடங்களில் இப்போது இருக்கக்கூடிய பள்ளிக்கூடங்களை பயிற்சி கூடங்கள் ஆக மாற்றி ஒவ்வொரு நாட்களும் கொஞ்சம் மாணவர்களை கொஞ்சம் நேரம் அங்கு அனுப்பி வைக்க முடியும். அந்த இடங்களில் மிக தெளிவான வழிகாட்டு முறைகளுடன் கூடிய கற்பித்தல் அதோடு கண்காணிப்பு செய்ய முடியும். அனைத்துமே, அதாவது ஒரு ஆசிரியர் பேசுவது, மாணவர்களிடம் பேசப்படுகின்ற ஒவ்வொரு விஷயமும் இணையத்தில் பெற்றோர்கள் பார்க்கக்கூடிய அளவுக்கு ஒரு வருடம் சேமித்து வைக்கும் செயல்களை செய்திருக்கவேண்டும். ஒரு வருடம் முடிந்த பின்னரும் அதை எங்கிருந்தும் ஒவ்வொரு பெற்றோரும் பார்க்கும் படி செய்யலாம். மூன்று வருடத்துக்கு பின்னர் அதை நீக்கம் செய்யலாம்.

அடுத்ததாக கல்வி முறையில் நிச்சயம் ஐந்தாம் வகுப்பு முதல் பாலியல் கல்வியை சேர்த்தே ஆக வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம். காரணம் இன்று ஒரு குழந்தை ஒன்றாம் வகுப்பில் படிக்கும்போதே பாலியல் சார்ந்த பலவிதமான காணொளிகள் tv மற்றும் பல விதங்களில் காண பெறுகிறார்கள். ஆனால் அந்த வயதில் அதன் முழு அகலம் தெரியாது என்பதால் ஐந்தாம் வகுப்பு முதல் நிச்சயம் இதற்கான கல்வித் திட்டத்தை உருவாக்கியே தீர வேண்டும்.

ஆனால் இதில் பிரச்சனை அனைத்து பெற்றோர்களும் பாலியல் கல்வி என்ற வார்த்தை கேட்டவுடனே "புணர்தல்" அல்லது "penetrative" என்ற விஷயத்தைப் பற்றி தான் யோசிக்கிறார்கள். எடுத்துக்காட்டாக:- உங்களுக்கு உடம்பில் ஒரு பாகத்தில் சொறிவது போல தோன்றினால் உங்கள் கை அதுவாகவே சொறிந்துவிடும். அதற்கு உங்களுக்கு தனிப் பயிற்சி தர வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. அதே போல் தான் இந்த விஷயத்தை ஒரு பூனைக்கும், யானைக்கும், எலிக்கும் தெரிவது போல குழந்தை பெற்றுக் கொள்வார்கள்.

ஆனால் உண்மையில் கற்றுக் கொடுக்க வேண்டிய விஷயம் எப்படி உயிருடன் உடல் கொண்டிருக்கும் நமது காதலன்/லி அல்லது கட்டிய மனைவி / கணவரோடு இதை கையாள வேண்டும் என்பதை தான். எப்படி இன்னொரு உடலின் மேல் வன்முறை செலுத்தாமல் பாதுகாப்புடன், அரவணைப்புடன், அன்புடன், தெளிவுடன், வாஞ்சையுடன், வெறுப்பின்றி கோபம் இல்லாமல் வன்முறையற்ற முறையில் அவர்களுக்குள் இன்பம் துய்க்க முடியும் என்பதை சொல்லி கற்றுக்கொடுக்க வேண்டிய தேவை உள்ளது. உடல் மாற்றங்கள், வலிகள், வேதனைகள் போன்ற அனைத்தையும் கற்பிக்க வேண்டும். அனைத்துக்கும் மேலாக MUTUAL CONSENT என்பதன் பொருளை, அதன் தேவையை, அதன் வரன்முறையை ஒவ்வொரு குழந்தைக்கும் சொல்லி கற்று கொடுக்க வேண்டும்... அனுமதி இல்லாமல் இன்னொருவரின் முடியை கூட தொட கூடாது என்பதை ஆழ் மனதில் பதிப்பிக்க வேண்டும். இன்றைய மாணவர்கள் தானே நாளைய ஆசிரியர்கள்.

இப்படி ஒரு கல்வி கொடுக்காமல் இந்த சமுதாயம் மாறும் என நினைத்தால் அது பகல் கனவு தான்.

Tuesday, 30 September 2014

மனித உணர்வு

                                      மனித உணர்வு


                          உணர்வு என்ற சொல் எங்கேயாவது பார்த்தாலோ கேட்டாலோ கூட மனித மனம் உடனே உடல் சார்ந்தே அதை பொருட்படுத்தி பார்க்கிறது அல்லது யோசிக்கிறது. இதில் காதல் ,காமம் என்ற உணர்வுகள் தான் பல மனங்கள் எப்போதும் அசைபோடும். இந்த உணர்வுகள் ஏன் வந்து பலபேர்களின் வாழக்கையை புரட்டிப்போட்டுவிட்டு செல்கிறது என்று பல பேர் பல நேரங்களில் யோசித்ததுண்டு.ஏன் அதோடு நில்லாமல் பல அழகான, அன்பான மனிதர்களை கல்லறைக்கும் அனுப்பிய பெருமை உள்ள உணர்வுகள் இவைத்தான். கமல்ஹாசன் ஒரு பாடலில் இதை அழகாக பதிவு செய்திருப்பார் . “காதல் ஒன்னும் கடவுள் இல்லையடா, இந்த எழவு எல்லாம் ஹார்மோன் செய்யும் கலகம் தானடா” என்று. ஆனாலும் யாரும் அதை நம்பவும் அதை உட்கொள்ளவும் தயாராக இல்லை.ஏன் என்றால் அதை இப்போதும் பலபேர் தெய்வீகத்துடன் ஒப்பிடுகின்றனர். அது அப்படிப்பட்டதா என்று இப்போது பல ஆராயிச்சிகள் செய்து ஒரு தெளிவான முடிவுக்கு மருத்துவ உலகம் வந்துள்ளது. ஏன் இப்படி மனித மனம் ஒரு வித பதற்றத்துடன் இதை கைக்கொள்ளுகிறது என்றும் ஆராய்ந்து முடிவுகளை கண்டறிந்துள்ளனர்.

                                                   
                                      தனியாக மனித உடலில் உள்ள இரசாயன சுரப்பிகள் பல விதமான இராசயனங்களை பல நேரங்களில் சுரக்கின்றது.அது மனிதன் உண்ணுகின்ற உணவை செரிமானம் செய்ய வைப்பது முதல்  உடலில் ஏற்படுகின்ற காயங்களை செரி செய்வது வரையான பல செயல்களை மனிதனின் மனம் கூட அறியாவண்ணம் செவ்வனே செய்து கொண்டிருக்கிறது. இதேப்போன்றதொரு சுரப்பிகள் சுரக்கின்ற ஒருவித இரசாயனம் தான் “ஓக்ஸ்ஸிடோசின்” மற்றும் “டோபமைன்”.  இதை மருத்துவ விஞ்ஞானிகள் இப்போது தனித்தனியாக பிரித்து எடுத்துள்ளனர் .இந்த இரு மூலக்கூறின்/இரசாயனத்தின் வேலைகள் சிறிது அல்ல. 


                           இந்த இரு மூலக்கூறு தான் மனிதனை காமப்பார்வை வீச வைப்பதும், காம களியாட்டங்கள் செய்ய தூண்டுவதும்,பங்காளியிடம் நம்பிக்கையுடன் நடந்து கொள்வதற்கும் , சில பல நேரங்களில் அடி ஆழ மனதில் ஒரு அழகான காதலை அல்லது ஒரு வித பாசத்துடனான நட்பை கூட தூண்ட செய்கிறது.இதை விட பயங்கரமான ஒரு வித காம தாபத்தையும் , ஒரு வித ஆக்ரோஷமான அல்லது ஒரு பெண்/ஆணை அடைய வேண்டும் என்றும் புணர வேண்டும் என்றும் ஒரு விதமான அடங்கா தேடலையும் கொள்ள செய்வது இந்த மூலக்கூறுகள் தான்.இந்த மூலக்கூறை 1990-ஆம் ஆண்டு வாக்கில் கண்டுப்பிடித்து விட்டனர்.ஆனால் அப்போது இது தாய்மை உணர்வை தூண்டக்கூடிய ஒரு இரசாயனம் தான் என்று கணித்தனர். ஆனால் இப்போது அதை பற்றிய விரிவான ஆராய்ச்சிகளின் பயனாக இந்த தகவல்கள் வெளிப்பட்டுள்ளது.


                            இப்போது இதை கண்டுபிடித்ததற்கு அவர்களை பாராட்டுவதைவிட திட்டுவதே செரியாக இருக்கும் என்று நினைக்கிறேன் . ஏன் என்றால் இனி காதலர்கள் தெய்வீக காதல் என பொய் சொல்லவும் முடியாது. ஏன் என்றால் தெளிவான ,விவரமான “யோக்கியர்கள்” உனக்கு “ஓக்ஸ்ஸிடோசின்” கொஞ்சம் அதிகமா சொரக்குது கொஞ்சம் நல்ல டாக்டரா பார்த்து கட்டுப்பெடுத்த ஊசி போட்டுக்கோ அப்படின்னு சொல்ல போகிறார்கள்.

                      
                                                       இதை இனி மாத்திரை போட்டு விற்பார்கள்.     பல கணவன்மார்கள், மனைவிகள் மற்றும் காதலர்கள் இதை வாங்கி தின்னவும் செய்வார்கள் இன்னும் சில வருடங்களில். இனி பல பல உணர்வுகளுக்கும் தனி தனியாக மாத்திரைகள் விற்பனைக்கு வரும். எந்த உணர்வு கொஞ்சம் கம்மியாக இருப்பதாக உணர்கிறோமோ அதை வாங்கி வைத்துக்கொண்டால் போதுமானது.அப்போதும் சூடு , சொரனைக்கென்று மாத்திரை வருமோ என்னமோ. ஏன் என்றால் பல “அரசியல்வியாதிகளுக்கு” அதை கலக்கி கொடுத்தாவது நம் நாட்டை நன்றாக்கி விடலாம் என்ற பேராசை தான் மனதில்... 

Monday, 15 September 2014

கலைகின்ற கனவுகள் – I

                                                                  கலைகின்ற கனவுகள் – I

                                     எவ்வளவு ஆசைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுடன் நாம் ஒவ்வொருவரும் வாழ எத்தனித்து கொண்டே இருக்கிறோம். ஒரு கனவு கலைவது என்பது எவ்வளவு பெரிய வலிகளை நமக்கு தருகிறது. நம் கனவுகள் பெரும்பாலும் தன்னலம் சார்ந்ததாக மட்டும் இருப்பதில்லை.


                                              நம்முடைய கனவுகளில் அல்லது எண்ணங்களில் நமது சுற்றத்தார் அல்லது நமக்கு மிகவும் பிரியமானவர்களுடன் ஒரு வாழ்கையை அந்த கனவுகளுடன் பயணப்பட முற்படுகிறோம். ஆனால் அது உடைந்து நம்மையும் நம் கனவுகளுடன் சேர்ந்து பயணிப்பவர்களையும் திசை மாற்றி செல்ல வைக்கிறது என்பது மிக பெரிய வேதனை என்பது ஒரு எலி கூண்டுக்குள் அகப்பட்டுக்கொண்டு விடுபட எத்தனிப்பதை போன்றது என்றே கருத தோன்றுகிறது.சில கனவுகள் சிதையும்போது ஒரு தலைமுறையே கருகும் பிளாஸ்டிக் பைகளை போல படராமல் இருக்க ஒரு வித வேதனையுடன் சகித்து ஜீரணிக்க முற்படுகிறோம். ஆனால் சில கனவுகள் உடைந்தால் பின் அதை யாதொரு காலத்திலும் அதை திரும்ப பெறுவதற்க்கான வாய்ப்புகள் இல்லாமலேயே மனித வாழ்க்கை முடிந்து போவது நிச்சயம் ஒரு மனமரணம் தான்..


                                                                        வண்டி

                                         ஒரு குழந்தை வளரத்தொடங்குவது முதல் வாகனங்கள் அல்லது வண்டிகள் ஒரு பிரமிப்பூட்டும் ஆச்சரியமாக தான் இருக்கிறது.ஒரு பெரிய வாகனம் ஒரு அழகு தான். ஒரு மனிதனின் வாழ்கையை ஒரு வாகனம் எவ்வளவு கச்சிதமாக மாற்றி விடுகிறது. ஒரு பேருந்தையோ, ஒரு வேனையோ , ஒரு ஷேர் ஆட்டோவையோ, ஒரு லாரியையோ வைத்துக்கொண்டு ஒரு குடும்பத்தை மிகவும் அழகாக நகர்த்திக்கொண்டு செல்லும் எத்தனை அப்பாக்கள் இன்று நம்மிடையே இருக்கின்றனர். எத்தனை குழந்தைகள் அப்பாக்களின் அந்த அழகிய வாகனங்களில் ஒரு வித ஆசை , சந்தோஷத்துடன் ஏறி அமர்ந்து செல்கின்றனர். எத்தனை மனைவிமார்கள் தங்கள் கனவுகளை அந்த ஒரு வாகனத்துடன் இணைத்துப்பார்க்கின்றனர். ஒரு வாகனம் வைத்திருக்கும் ஒரு அப்பாவுக்கு அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்துக்கொண்டு தன் மகள் ,மகன்களின் படிப்பு மற்றும் உணவு உடைகளுக்கு வசதி ஏற்படுத்த பாடுபடுகின்றனர் .அதில் கிடைக்கும் வருமானத்தை சிறுக சேமித்தும் அதை நம்பியும் தான் பல குடும்பங்களுக்கு பல கனவுகள் மெய்பட்டுக்கொண்டு இருக்கிறது என்பது உண்மையே. ஒரு பெண் பிள்ளையின் கல்யாண கனவுகள் , ஒரு வயதான அப்பா , அம்மாக்களின் மருத்துவ செலவுகள் என அனைத்தையும் ஒரு வாகனத்தை வைத்துக்கொண்டு நிறைவேற்றும் எத்தனை அப்பாக்கள் இங்கு இருகின்றனர்.எத்தனை தங்கைகளின் தம்பிகளின் வாழ்கையை அண்ணன்கள் ஒரு வாகனத்துடன் பூர்த்திப்பெற வைக்க உழைகின்றனர். எத்தனை சிரமங்களின் இடையில் இன்று ஒரு வண்டி மட்டுமே வைத்துக்கொண்டு எத்தனையோ சாதாரணமானவர்கள் வாழ்க்கையை சாதுரியமாக முன்னெடுத்துச் செல்கின்றனர். 


                                                   எவ்வளவு எதிர்பார்ப்புகளுடன் ஒரு மனிதன் தங்கைகளின், மனைவியின் , பெற்ற தாயின் தாலி மாலையை கழற்றி விற்றோ அடமானம் வைத்தோ, பல தெரிந்த தெரியாத நபர்களிடம் கடன் வாங்கி ஒரு ஆட்டோவோ,லாரியோ,டம்போவோ வாங்குகின்றனர். அதில் நிச்சயம் நேர்த்தியாக வருமானம் வரும் தம் குடும்ப தேவைகள் நிறைவுப்பெறும் வாழ்கையை இனிதாக முன்னெடுத்துச் சென்றுவிடலாம் என்ற கனவுகளுடன் சில பல மனக்கணக்குகள் மற்றும் பணக்கணக்குகளுடன் தான் ஒரு வாகனத்தை ஒரு ஷோவ்ரூமில் இருந்து எடுத்து வருகின்றனர். எத்தனை கடவுள்களுக்கு அர்ச்சனைகள், வழிபாடுகள்,நேர்த்திகடன்கள் என செய்து அந்த வாகனத்தை வீட்டின் முன் கொண்டு நிப்பாட்டும் போது ஒரு குடும்பமே அல்லது ஒரு மனித வாழ்க்கையே அதை ஒரு கடவுளாக ஒரு வரம் தரும் கோயிலாக பார்க்கிறது.எத்தனை எதிர்கால கனவுகள் அந்த சில கணங்களில் அந்த குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தினர்க்கும் வந்து போகிறது.

                                                     ஒரு முறை யோசித்து பாருங்கள் மொத்த இந்தியாவில் எத்தனை கோடி வாகனங்கள் அதில் எத்தனை பேர் ஒரே ஒரு வாகனத்தை மட்டும் நம்பி வாழும் மனிதர்கள். எத்தனை குடும்பங்கள் ஒரு வாகனத்தை மட்டும் வைத்துக்கொண்டு வாழ்கையை ரசனையுடன் வாழ முற்படுகின்றனர். ஒரு விதமான பிரமிப்பு வராமல் இல்லை.சில பல ஆயிரங்களை மட்டுமே வருமானமாக தரும்  என்று தெரிந்தும் .சொந்த வாகனத்தை வாங்க பல ஓட்டுனர்களும் விரும்புவது தான் யாரிடமும் கைகெட்டி வேலை பார்க்க வேண்டாம் மற்றும் தான் விரும்பும் நேரங்களில் வண்டியை ஓட்டினால் போதும் என்ற சிறு பரவசம் தான். அதேபோல் குறைந்த வருமானம் வந்தாலும் அதில் பாதியை வங்கிகளுக்கு தவணையில் செலுத்திவிட்டு மீதம் உள்ளதை வைத்து ஒரு குடும்பத்தை ஒரு அரசை விட கச்சிதமாக கணக்கீட்டின் மூலம் முன்னெடுத்து செல்கின்றனர்.


                                      ஆனால் என்றும் ஒரு சராசரி மனிதனின் கனவுகள் எளிதாக கைகூடி விடுவதே இல்லை. அந்த கனவுகளின் பயணம் பல நேரங்களில் பல விதங்களில் தடுக்கப்படுகிறது அல்லது உடைக்கப்படுகிறது. ஏதேனும் ஒரு நிர்பந்தத்தால் ஒரு வாகனம் காவல் நிலையத்தில் போய்விட்டது என்றால் அன்று விழுகிறது முதல் அடி. பல காவல் நிலையங்களில் பிச்சைக்காரர்களுக்கு அரசு யூனிபோர்ம் கொடுத்து உட்கார வைத்துள்ள மனித சாக்கடைகள் எந்த தயவு தாட்சண்யம் இல்லாமல் வாகனத்தை திருப்பி கொடுக்க விலை பேசுவார்கள். அதுவும் 100/200 என்ற வார்த்தைகள் அல்ல. சில பல ஆயிரங்களில் தான் அவர்களின் முதல் வார்த்தை ஆரம்பமாகும்.அதுவும் பொய் வழக்குகள் என்றால் அவர்கள் பழத்தில் ஊசியை சொருகுவதை போல் மிகவும் சாதுரியமாக பேசி கறந்து விடுவார்கள் . சின்னஞ்சிறு தவறுகள் நம் பக்கம் இருந்தால் நம் சொத்தை எழுதி வாங்காமல் விடமாட்டார்கள். ஏன் மனைவிகளின் தாலி மாலையுடன் சிறு குழந்தைகளின் இடுப்பு கொடியை வரை விற்றாவது தான் பல வாகனங்கள் காவல் நிலையத்தில் இருந்தும் வெளியே கொண்டுவரப்படுகிறது.


                                            ஒரே ஒரு முறை அந்த வாகனம் உள்ளே சென்று வெளியே வந்தால் அந்த சாதாரணமானவர்களின் கனவுகள் சிறியதாக உடைய தொடங்குகிறது. ஆனாலும் அதில் இருந்து மீண்டு வந்துவிடலாம் என்ற சிறு நம்பிக்கையுடன் தான் கண்ணீருடனும், வேதனையுடனும் திரும்ப பழையபடி வேலையை பார்க்க புறப்படுகின்றனர்.
ஆனால் அந்த பிச்சைக்காரர்களுக்கு காசு கொடுக்க வேண்டாம் என்ற மனநிலையில் இருந்தாலும் பல நேரங்களில் அந்த பிச்சைக்கார கூட்டம் வழக்கை காவல் நிலையங்களில் முடிக்க முனையும். அதற்கு தான் ஒவ்வொரு மனிதனும் ஆசையும் படுவான். அதற்கு காரணம் இரண்டு நாள் கழித்து தான் நீதிமன்றத்தில் இருந்து திரும்ப கொண்ட வர முடியும் என்றால் அது மேலும் பல சிக்கல்களை அவர்களுக்கு ஏற்படுத்தும் என்பதை தெரிந்தே இந்த பாவப்பட்டவர்கள் கடன் மற்றும் பண்டப்பாத்திரங்களை விற்றாவது சீக்கிரம் வாகனத்தை வெளியே எடுக்க முற்படுகின்றனர்.


                                          ஆனால் பணம் புரட்ட முடியாமல் போனால் அது தான் அவர்களின் வாழ்வில் ஏற்படும் முதல் கிரகணம் என்றால் அது மிகையல்ல. ஒரு மாதம் அந்த வாகனம் அந்த காவல் நிலையத்தில் இருந்தால் அதற்கு பிறகு எந்தவொரு ஒட்டுனர்க்கும் தன் சொந்த வாகனத்தை அடையாளம் கண்டுபிடிக்கவே தனி சிபிஐ வைக்கவேண்டியது தான் என்பது போய் வந்தவர்களின் கண்ணீர் பதில்கள் .

                                        அங்கே உருகுலைக்கப்பட்டு கிடப்பது அந்த ஒரு வாகன ஓட்டியின் வாகனம் மட்டுமல்ல ஏதோ ஒரு அம்மாவின் தாலி மாலையின் கடைசி கண்ணியும் தான், ஒரு மனைவியின் எதிர்பார்ப்புக்கள் மட்டும் அல்ல அந்த மொத்த குடும்பத்தின் எதிர்காலமே தான். எத்தனை பாவப்பட்டவர்கள் வாழ்கை ஓட்டத்தையே முடித்துள்ளனர் என்பதை அங்கே ஓடாமல் ஒய்ந்து போய் காற்றில்லாமல் நிற்கும் சக்கரங்கள் சொல்லும்...

Monday, 1 September 2014

மனித மிருகங்கள்

     மனித மிருகங்கள்  


                             இன்றைய சூழலில் மனிதன் என்ற வார்த்தைக்கு ஒரே பொருள் மிருக குணம் கொண்டலையும் இரண்டு கால் கொண்ட மனம் புழுத்த  பிணங்கள். மனிதநேயம் என்ற வார்த்தைக்கு இனி மனித மனங்களிலோ , இல்லை வார்த்தைகளிலோ கூட இடம் இருக்கும் என்று நம்புவது மிகப்பெரும் கடினம் என்பது இன்றைய தினசரி வாழ்க்கை நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கின்ற பாடம் என்பது திண்ணம்.

            
                               சகமனிதனை நாம் மனிதனாக பார்க்காவிட்டால் கூட பரவாயில்லை.ஆனால் உயிரும்,உணர்வும் உள்ள ஒரு ஜீவன் என்றாவது எண்ணுவதற்கு ஏன் நம் புத்தியோ இல்லை இதயமோ இடமளிக்கவில்லை என்பது வேதனையிலும் வேதனை தான். மனிதமனங்கள் இன்று மலத்தை விடவும் நாற்றம் அடிக்கும் சாக்கடையாக ஏன் வைத்துக்கொண்டு நடக்கின்றோம் என்று நினைத்து பார்பதற்கு கூட நமக்கு இன்று நேரம் இல்லை. இவ்வளவு பரபரப்பாக எதை தேடி, எதை காப்பாற்ற நாயை விட கேவலமாக அலைந்து திரிந்துக்கொண்டு இருக்கிறோம்.


                          தடுக்கி விழுந்தவனை கைக்கொடுத்து எழுப்பி விடுவதற்கோ , பிழை செய்தவனை அன்புடன் அரவணைத்து ஆதரவு காட்டி திருத்தவோ நாம் இன்று சிறு முயற்சிகள் கூட எடுக்க விருப்பப்படுவதும் இல்லை. நம் முன்னால் ஒருவன் ஓடினால் அவனை தடுக்கி விழவைத்து சிரித்து அவனை வேதனைப்படுத்துவதில் நாம் இன்று மிகவும் ஒற்றுமையுடன் தான் இருக்கின்றோம். இன்றைய நிலையில் நம் அனைவருக்கும் கையில் துப்பாக்கியை தந்து உங்களுக்கு பிடிக்காதவர்களை இந்த ஒருவாரத்தில் கொல்லலாம் என்று அரசாணை பிறப்பித்தல் அடுத்த வாரம் இந்தியாவில் ஒரு மனிதனும் மிஞ்ச மாட்டான் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை.


                    ஒரு நிமிடம் மனம் கொண்டு நமக்கு பிடித்தவர்களிடம் பேசவோ , இன்னொருவரின் வேதனையை கேட்டு கண்ணீர் விடவோ இன்று ஒருவருக்கும் நேரமில்லை. அந்த ஒரு நிமிடம் கிடைத்தால் ஒரு வாடிக்கையாளர் முன் குரங்கை போல் வேடிக்கை காட்டி அவனை மடையனாக்கி 5-ரூபாய் சம்பாதிக்க தான் யோசிக்கிறோம். இன்று பணம் என்ற ஒரு விஷயத்திற்காக நாம் நேரடியாக,மறைமுகமாக பலபேரை வேதனை மற்றும் துயரங்களை அனுபவிக்க வைக்கிறோம். பல நேரங்களில் பலரையும் கேவலப்படுத்துகிறோம். பணம் இல்லாதவனை கையால் ஆகாதவன் என்றும், பிச்சைகாரனை போலவும் காத்திருக்க வைத்து வேடிக்கை காட்டுகிறோம்.

                  
                     மற்றொருவர் படும் வேதனை அவர்கள் வாழும் சூழ்நிலை, அவர்களுக்கு வேண்டிய தேவைகள் என எதுவும் நாம் அறியவேண்டிய நிர்பந்தம் இல்லை என்ற ஒரு குறுகிய கண்ணோட்டத்துடன் தான் இன்று நமது வாழ்க்கை அமைத்துக்கொண்டு இருக்கிறோம். அதை தான் பிறருக்கும் போதிக்கிறோம். நமது அடுத்த தலைமுறைக்கும் இந்த விஷ எண்ணங்களை பிஞ்சு மனங்களில் சிறு வயது முதல் ஏற்றுகிறோம். இந்த முற்கால வினைகள் பிற்காலத்தில் திரும்பவும் வரும் என்று யோசிப்பதும் இல்லை. பணம் தான் நீ சம்பாதிக்க வேண்டும் என்றும் நல்ல குணமோ, இரக்ககுணமோ அல்ல என்று சொல்லி வளர்க்கப்படும் ஒவ்வொரு குழந்தையும் எதிர்காலத்தில் உங்கள் உபயோகங்களும் முடிந்த உடன் உங்களையும் அதே போல் குப்பை தொட்டியில் தூக்கி வீசும் என்பதையும் நினைவில் கொள்க.

                            


                              ஒருகாலத்தில் மனித மனங்களில் விரக்தி குறைவாக தான் இருந்தது என்பது உண்மை. இன்று உதவும் குணம் என்பது அரிதாகிவிட்டது . அடுத்தவர் துயர்கண்டு கண்ணீர் விடும் மனங்கள் விரல் விட்டு எண்ணும் அளவுக்கு சுருங்கி விட்டது என்பது உண்மையே. இன்று பக்கத்து வீட்டில் நடக்கின்ற துயரங்கள் கூட ஏதோ ஆயிரம் கிலோமீட்டர்க்கு அப்பால் நடந்தை போலவும், அறியாததை போலவும் , அமைதியாக கதவுகளை மூடிவிட்டு உள்ளே சிரித்து விளையாடி கொண்டிருக்கின்றோம். அல்லது அதற்கு முயற்சிக்கின்றோம்.


           

                              சொந்தங்களின் மரணங்கள் , நண்பர்களின் பிரிவுகள் என எதுவும் நம்மை அதிர்ச்சி அடையவோ , வேதனை அடையவோ செய்வதில்லை. அதை பணம் ,அல்லது அவர்களின் அந்தஸ்து தான் தீர்மானிக்கின்றது என்பதை என்னவென்று சொல்வது. பக்கத்து வீட்டில் யாரேனும் இடும் மரண ஓலங்கள் கூட நம்மை அசைப்பது இல்லை. இத்தனை கொடூரமான பிணங்களாக வாழ்ந்து எதை சாதித்து விட்டோம்.

அடுத்தவரின் வேதனைகளை கூட வேடிக்கை பார்ப்பதில் நமக்கு அவ்வளவு ஆர்வம். பத்து குழந்தைகள் ஒரு விபத்தில் சிக்கி கொண்டனர் என்பது இன்று நொறுக்கி தீனி தின்று கொண்டே கேட்டு விட்டு அடுத்த சேனலை சீக்கிரம் மாற்றி திரைபடத்தில் வரும் கற்பழிப்பு காட்சியை ரசனையுடன் பார்க்கும் புண்ணியவான்களாக நாம் மாறிக்கொண்டு இருக்கிறோம் என்பது எவ்வளவு அவலம். அந்த குழந்தைகளின் நிலை என்ன என்றோ அவர்களின் வேதனை என்ன என்றோ நாம் சிந்திப்பதும் இல்லை அதை பற்றி அடுத்தவரிடம் ஒரு மனக்குமுறலை வெளிப்படுத்த உண்டான மனம் கூட நம்மிடம் இல்லை. நமக்கு வரும்வரை அனைத்தும் நமக்கு ஒரு பொழுதுபோக்கு செய்தி மட்டுமே. அதில் வரும் எந்த அதிர்ச்சியோ,வேதனையோ நம்மை எவ்விதத்திலும் சீண்டபோவதே இல்லை என்பது நாம் மனிதர்கள் அல்ல மலங்கள் அல்லது மனித மிருகம் என்று நிரூபிக்கிறது...