Monday 15 September 2014

கலைகின்ற கனவுகள் – I

                                                                  கலைகின்ற கனவுகள் – I

                                     எவ்வளவு ஆசைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுடன் நாம் ஒவ்வொருவரும் வாழ எத்தனித்து கொண்டே இருக்கிறோம். ஒரு கனவு கலைவது என்பது எவ்வளவு பெரிய வலிகளை நமக்கு தருகிறது. நம் கனவுகள் பெரும்பாலும் தன்னலம் சார்ந்ததாக மட்டும் இருப்பதில்லை.


                                              நம்முடைய கனவுகளில் அல்லது எண்ணங்களில் நமது சுற்றத்தார் அல்லது நமக்கு மிகவும் பிரியமானவர்களுடன் ஒரு வாழ்கையை அந்த கனவுகளுடன் பயணப்பட முற்படுகிறோம். ஆனால் அது உடைந்து நம்மையும் நம் கனவுகளுடன் சேர்ந்து பயணிப்பவர்களையும் திசை மாற்றி செல்ல வைக்கிறது என்பது மிக பெரிய வேதனை என்பது ஒரு எலி கூண்டுக்குள் அகப்பட்டுக்கொண்டு விடுபட எத்தனிப்பதை போன்றது என்றே கருத தோன்றுகிறது.சில கனவுகள் சிதையும்போது ஒரு தலைமுறையே கருகும் பிளாஸ்டிக் பைகளை போல படராமல் இருக்க ஒரு வித வேதனையுடன் சகித்து ஜீரணிக்க முற்படுகிறோம். ஆனால் சில கனவுகள் உடைந்தால் பின் அதை யாதொரு காலத்திலும் அதை திரும்ப பெறுவதற்க்கான வாய்ப்புகள் இல்லாமலேயே மனித வாழ்க்கை முடிந்து போவது நிச்சயம் ஒரு மனமரணம் தான்..


                                                                        வண்டி

                                         ஒரு குழந்தை வளரத்தொடங்குவது முதல் வாகனங்கள் அல்லது வண்டிகள் ஒரு பிரமிப்பூட்டும் ஆச்சரியமாக தான் இருக்கிறது.ஒரு பெரிய வாகனம் ஒரு அழகு தான். ஒரு மனிதனின் வாழ்கையை ஒரு வாகனம் எவ்வளவு கச்சிதமாக மாற்றி விடுகிறது. ஒரு பேருந்தையோ, ஒரு வேனையோ , ஒரு ஷேர் ஆட்டோவையோ, ஒரு லாரியையோ வைத்துக்கொண்டு ஒரு குடும்பத்தை மிகவும் அழகாக நகர்த்திக்கொண்டு செல்லும் எத்தனை அப்பாக்கள் இன்று நம்மிடையே இருக்கின்றனர். எத்தனை குழந்தைகள் அப்பாக்களின் அந்த அழகிய வாகனங்களில் ஒரு வித ஆசை , சந்தோஷத்துடன் ஏறி அமர்ந்து செல்கின்றனர். எத்தனை மனைவிமார்கள் தங்கள் கனவுகளை அந்த ஒரு வாகனத்துடன் இணைத்துப்பார்க்கின்றனர். ஒரு வாகனம் வைத்திருக்கும் ஒரு அப்பாவுக்கு அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்துக்கொண்டு தன் மகள் ,மகன்களின் படிப்பு மற்றும் உணவு உடைகளுக்கு வசதி ஏற்படுத்த பாடுபடுகின்றனர் .அதில் கிடைக்கும் வருமானத்தை சிறுக சேமித்தும் அதை நம்பியும் தான் பல குடும்பங்களுக்கு பல கனவுகள் மெய்பட்டுக்கொண்டு இருக்கிறது என்பது உண்மையே. ஒரு பெண் பிள்ளையின் கல்யாண கனவுகள் , ஒரு வயதான அப்பா , அம்மாக்களின் மருத்துவ செலவுகள் என அனைத்தையும் ஒரு வாகனத்தை வைத்துக்கொண்டு நிறைவேற்றும் எத்தனை அப்பாக்கள் இங்கு இருகின்றனர்.எத்தனை தங்கைகளின் தம்பிகளின் வாழ்கையை அண்ணன்கள் ஒரு வாகனத்துடன் பூர்த்திப்பெற வைக்க உழைகின்றனர். எத்தனை சிரமங்களின் இடையில் இன்று ஒரு வண்டி மட்டுமே வைத்துக்கொண்டு எத்தனையோ சாதாரணமானவர்கள் வாழ்க்கையை சாதுரியமாக முன்னெடுத்துச் செல்கின்றனர். 


                                                   எவ்வளவு எதிர்பார்ப்புகளுடன் ஒரு மனிதன் தங்கைகளின், மனைவியின் , பெற்ற தாயின் தாலி மாலையை கழற்றி விற்றோ அடமானம் வைத்தோ, பல தெரிந்த தெரியாத நபர்களிடம் கடன் வாங்கி ஒரு ஆட்டோவோ,லாரியோ,டம்போவோ வாங்குகின்றனர். அதில் நிச்சயம் நேர்த்தியாக வருமானம் வரும் தம் குடும்ப தேவைகள் நிறைவுப்பெறும் வாழ்கையை இனிதாக முன்னெடுத்துச் சென்றுவிடலாம் என்ற கனவுகளுடன் சில பல மனக்கணக்குகள் மற்றும் பணக்கணக்குகளுடன் தான் ஒரு வாகனத்தை ஒரு ஷோவ்ரூமில் இருந்து எடுத்து வருகின்றனர். எத்தனை கடவுள்களுக்கு அர்ச்சனைகள், வழிபாடுகள்,நேர்த்திகடன்கள் என செய்து அந்த வாகனத்தை வீட்டின் முன் கொண்டு நிப்பாட்டும் போது ஒரு குடும்பமே அல்லது ஒரு மனித வாழ்க்கையே அதை ஒரு கடவுளாக ஒரு வரம் தரும் கோயிலாக பார்க்கிறது.எத்தனை எதிர்கால கனவுகள் அந்த சில கணங்களில் அந்த குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தினர்க்கும் வந்து போகிறது.

                                                     ஒரு முறை யோசித்து பாருங்கள் மொத்த இந்தியாவில் எத்தனை கோடி வாகனங்கள் அதில் எத்தனை பேர் ஒரே ஒரு வாகனத்தை மட்டும் நம்பி வாழும் மனிதர்கள். எத்தனை குடும்பங்கள் ஒரு வாகனத்தை மட்டும் வைத்துக்கொண்டு வாழ்கையை ரசனையுடன் வாழ முற்படுகின்றனர். ஒரு விதமான பிரமிப்பு வராமல் இல்லை.சில பல ஆயிரங்களை மட்டுமே வருமானமாக தரும்  என்று தெரிந்தும் .சொந்த வாகனத்தை வாங்க பல ஓட்டுனர்களும் விரும்புவது தான் யாரிடமும் கைகெட்டி வேலை பார்க்க வேண்டாம் மற்றும் தான் விரும்பும் நேரங்களில் வண்டியை ஓட்டினால் போதும் என்ற சிறு பரவசம் தான். அதேபோல் குறைந்த வருமானம் வந்தாலும் அதில் பாதியை வங்கிகளுக்கு தவணையில் செலுத்திவிட்டு மீதம் உள்ளதை வைத்து ஒரு குடும்பத்தை ஒரு அரசை விட கச்சிதமாக கணக்கீட்டின் மூலம் முன்னெடுத்து செல்கின்றனர்.


                                      ஆனால் என்றும் ஒரு சராசரி மனிதனின் கனவுகள் எளிதாக கைகூடி விடுவதே இல்லை. அந்த கனவுகளின் பயணம் பல நேரங்களில் பல விதங்களில் தடுக்கப்படுகிறது அல்லது உடைக்கப்படுகிறது. ஏதேனும் ஒரு நிர்பந்தத்தால் ஒரு வாகனம் காவல் நிலையத்தில் போய்விட்டது என்றால் அன்று விழுகிறது முதல் அடி. பல காவல் நிலையங்களில் பிச்சைக்காரர்களுக்கு அரசு யூனிபோர்ம் கொடுத்து உட்கார வைத்துள்ள மனித சாக்கடைகள் எந்த தயவு தாட்சண்யம் இல்லாமல் வாகனத்தை திருப்பி கொடுக்க விலை பேசுவார்கள். அதுவும் 100/200 என்ற வார்த்தைகள் அல்ல. சில பல ஆயிரங்களில் தான் அவர்களின் முதல் வார்த்தை ஆரம்பமாகும்.அதுவும் பொய் வழக்குகள் என்றால் அவர்கள் பழத்தில் ஊசியை சொருகுவதை போல் மிகவும் சாதுரியமாக பேசி கறந்து விடுவார்கள் . சின்னஞ்சிறு தவறுகள் நம் பக்கம் இருந்தால் நம் சொத்தை எழுதி வாங்காமல் விடமாட்டார்கள். ஏன் மனைவிகளின் தாலி மாலையுடன் சிறு குழந்தைகளின் இடுப்பு கொடியை வரை விற்றாவது தான் பல வாகனங்கள் காவல் நிலையத்தில் இருந்தும் வெளியே கொண்டுவரப்படுகிறது.


                                            ஒரே ஒரு முறை அந்த வாகனம் உள்ளே சென்று வெளியே வந்தால் அந்த சாதாரணமானவர்களின் கனவுகள் சிறியதாக உடைய தொடங்குகிறது. ஆனாலும் அதில் இருந்து மீண்டு வந்துவிடலாம் என்ற சிறு நம்பிக்கையுடன் தான் கண்ணீருடனும், வேதனையுடனும் திரும்ப பழையபடி வேலையை பார்க்க புறப்படுகின்றனர்.
ஆனால் அந்த பிச்சைக்காரர்களுக்கு காசு கொடுக்க வேண்டாம் என்ற மனநிலையில் இருந்தாலும் பல நேரங்களில் அந்த பிச்சைக்கார கூட்டம் வழக்கை காவல் நிலையங்களில் முடிக்க முனையும். அதற்கு தான் ஒவ்வொரு மனிதனும் ஆசையும் படுவான். அதற்கு காரணம் இரண்டு நாள் கழித்து தான் நீதிமன்றத்தில் இருந்து திரும்ப கொண்ட வர முடியும் என்றால் அது மேலும் பல சிக்கல்களை அவர்களுக்கு ஏற்படுத்தும் என்பதை தெரிந்தே இந்த பாவப்பட்டவர்கள் கடன் மற்றும் பண்டப்பாத்திரங்களை விற்றாவது சீக்கிரம் வாகனத்தை வெளியே எடுக்க முற்படுகின்றனர்.


                                          ஆனால் பணம் புரட்ட முடியாமல் போனால் அது தான் அவர்களின் வாழ்வில் ஏற்படும் முதல் கிரகணம் என்றால் அது மிகையல்ல. ஒரு மாதம் அந்த வாகனம் அந்த காவல் நிலையத்தில் இருந்தால் அதற்கு பிறகு எந்தவொரு ஒட்டுனர்க்கும் தன் சொந்த வாகனத்தை அடையாளம் கண்டுபிடிக்கவே தனி சிபிஐ வைக்கவேண்டியது தான் என்பது போய் வந்தவர்களின் கண்ணீர் பதில்கள் .

                                        அங்கே உருகுலைக்கப்பட்டு கிடப்பது அந்த ஒரு வாகன ஓட்டியின் வாகனம் மட்டுமல்ல ஏதோ ஒரு அம்மாவின் தாலி மாலையின் கடைசி கண்ணியும் தான், ஒரு மனைவியின் எதிர்பார்ப்புக்கள் மட்டும் அல்ல அந்த மொத்த குடும்பத்தின் எதிர்காலமே தான். எத்தனை பாவப்பட்டவர்கள் வாழ்கை ஓட்டத்தையே முடித்துள்ளனர் என்பதை அங்கே ஓடாமல் ஒய்ந்து போய் காற்றில்லாமல் நிற்கும் சக்கரங்கள் சொல்லும்...

No comments:

Post a Comment