Wednesday, 3 June 2015

இலங்கை : பிளந்து கிடக்கும் தீவு - புத்தக விமர்சனம்

                         புத்தகத்தின் தலைப்பே உள்ளிருக்கும் முழுத் தகவல்களையும் சொல்லிவிடுகிறது. இந்தப் புத்தகத்தைத் திறக்க விழையும்போது மனம் நம்மையறியாமல் ஒரு விதமான வருத்தத்தை, தயக்கத்தை மற்றும் மனக்குமுறலை வெளிப்படுத்துகிறது என்பதே நிதர்சனம்.

                     இந்தியாவின் கீழே இருக்கின்ற குட்டியோண்டு தேசமான இலங்கை 1948 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற்றது முதல் 2010 ஆம் ஆண்டு முடிய நடந்த மிகப்பெரிய கவனத்தில் கொள்ளவேண்டிய செய்திகளை காலவரிசையில் ஒரு தொகுப்பாகவே ஆசிரியர் முன்னமே தெரிவித்துவிடுகிறார்.

                    இந்நூலை ஆசிரியர் ஒரு பயணக்கட்டுரை போலவே கொடுத்துள்ளார் என்பது நாமும் அவருடன் பயணித்து அவர் கண்ட, பேசிய, சந்தித்த விஷயங்களில் ஒன்றிப்போவதற்கு இலகுவாக இருக்கிறது. இது ஒரு மொழிபெயர்க்கப்பட்ட நூல் என்பது சொல்லிதான் தெரியவேண்டி இருக்கிறது, அல்லாமல் நிச்சயம் தெரிவதற்கு வாய்ப்பே இல்லை என்பதே உண்மை. இம்மூல நூலின் ஆசிரியரும் ஒரு தமிழர் என்பது கருத்தில் கொள்ளவேண்டிய விடயம்தான்.


                      இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்துத் தகவல்களும் ஆசிரியர் தான் நேராகவே பல முறை இலங்கைக்கு பல காலகட்டங்களில் பயணித்து அங்குள்ள பல மக்களையும், விடுலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களையும், தமிழ் இராணுவ அதிகாரிகளையும், அங்கு வாழும் புத்த பிக்குகளையும், இஸ்லாமிய சகோதரர்களையும் நேர்காணல் செய்து எழுதியுள்ளதே இப்புத்தகத்தின் மதிப்பையும் உண்மைத்தன்மையையும் அதிகப்படுத்துகிறது.

                          இலங்கையின் உள்நாட்டுத் தமிழர்களுக்கிடையே இருந்த ஒற்றுமையின்மையும், மத அடிப்படையில் ஏற்பட்ட பிளவுகளும் அதன் மூலம் அவர்கள் சந்தித்த அடக்குமுறைகள் ஆகியவற்றை இந்நூல் கச்சிதமாக விளக்குகிறது. விடுதலைப்புலிகளின் மிக நேர்த்தியான திட்டமிடலையும், அவர்களின் தாக்குதல்களையும், அதில் சிலர் தப்பிப் பிழைத்த நிகழ்வுகளையும் நம் கண்முன்னே ஒரு திரைப்படம் பார்ப்பதுபோல் விவரித்துள்ளார்.

                           இப்போது போர் முடிந்தாலும் அங்கே நிலவி வரும் மக்களின் அச்சவுணர்வு, நம்பிக்கையின்மை மற்றும் தினம் தினம் உலவும் பலவிதமான வதந்திகள் என முதல் சில பக்கங்களிலேயே அந்நாட்டின் இன்றைய நிலை தெளிவாகத் தெரிந்துவிடுகிறது. இலங்கையில் புத்த மதத்தின் வளர்ச்சி, அதன் ஆதிக்கம் மற்றும் மற்ற மத மக்களின் நிலை என பல செய்திகளை சுருங்கச் சொல்லிக்கொண்டே போகிறது.

                            இலங்கையில் முதன்முதலாக தமிழ் மக்களுக்கு எதிராகக் கிளம்பிய கலகங்கள், அவை உருவான விதம், அதன் மூலம் தமிழ் மக்களைக் கொன்று குவித்த நிகழ்வுகள், அதற்கு பதிலடி கொடுக்க உருவான விடுதலைப்புலிகள் அமைப்பின் வரலாறு, அதன் போர் முறைகள், பிரபாகரன் அவர்களின் முதல் கொலை மற்றும் அவர் பின்பற்றிய சில சட்டதிட்டங்கள், அவர்களின் தாக்குதல்கள், மற்றும் அது நடைபெற்ற இடங்களும் அதன் இன்றைய நிலையையும் அதில் இறந்த மனிதர்களின் தகவல்கள் என சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலான காலச்சக்கரத்தை நம் கண்முன்னே விரிக்கிறது இப்புத்தகம்.

                           அதேபோல் விடுதலைப்புலிகளின் அமைப்பில் ஏற்பட்ட சில பிளவுகள், அந்த அமைப்பில் இருந்து கருத்து வேறுபாட்டால் பிரிந்து மனைவியுடன் கனடா சென்று அங்கு வாழ்ந்துவரும் ராகவன் என்பவரின் நேர்காணல் மற்றும் பலரது நேர்காணல்களும் நமக்கு சில பல அதிர்ச்சிகளைத் தரக்கூடியதாகவே உள்ளது. நாம் முன்னால் கேட்டு, படித்திருந்த தகவல்களுக்கு நேரெதிராகவே பல விஷயங்கள் நிஜத்தில் உள்ளது. ஒரு இடத்தில் ராகவன் இப்படிச் சொல்கிறார், “பத்தே ஆண்டுகளில் தேவை என்று நினைத்த விஷயத்துக்காக கொலை செய்வதிலிருந்து விளையாட்டாக கொலை செய்யும் நிலைக்கு புலிகள் வந்திருந்தனர்” போன்ற பல விடயங்கள் வியப்பையும், அதிர்ச்சியையும் நல்குவதாகவே உள்ளன.

                 ஒரே ஒரு தமிழராக துரைராஜா என்பவர் இலங்கை இராணுவத்தில் மேஜர் ஜெனரலாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். அவர் தரும் பலவிதமான தகவல்களும் வேறொன்றாகவே இருக்கிறது. அங்கு இறுதிக்கட்டப் போரில் நடைபெற்ற தாக்குதல்கள் மற்றும் அத்துமீறல்கள் ஆகியவை பற்றி ஐ.நா சபையின் கேள்விக்கு கோத்தபய ராஜபக்சே ஆகஸ்ட் 2010-ல் சமர்ப்பித்த அறிக்கையின் சில பகுதிகளும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. அங்கு நடைபெற்ற பல விதமான மனித உரிமை மீறல்கள் பற்றியும், கொடூரக்கொலைகளைப் பற்றியும் படிக்கும்போது நம் கண்களைத் திறக்க முடியாத அளவுக்கு கண்ணீர் பெருக்கெடுக்கிறது என்பது உண்மை. அதிலும் தமிழ் மக்களின் நிலைமையை தமிழ் இராணுவ அதிகாரியான ரவி அவர்கள் சொல்லும் தகவல்கள் நம்மை வாய்விட்டே அழ வைத்துவிடுகிறது. ஒரு இடத்தில் ஒரு செய்தி சொல்கிறார், “நீங்கள் எல்லோரும் ஒரு ஆளை எப்படிக் கொல்வது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஆகவே அதற்கு ஒரு தமிழனைத் தேர்ந்தெடுத்து அவனைக் கொன்று பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள்” என அவர்களுக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டதைப் பற்றி.

                              அதேபோல் வேறு அத்தியாயத்தில் வடக்கு மாகாணத்தைப் பற்றியும், யாழ்ப்பாணத்தைப் பற்றியும் அங்கு வாழ்ந்த மக்களைப் பற்றியும் அவர்களின் கடந்த கால வாழ்க்கையையும், இன்றைய நிலைமையையும், அவர்களின் மறக்க முடியாத நினைவுகளையும் சேகரித்துத் தந்துள்ளார் ஆசிரியர். அதேபோல் “ஸ்ரீ” என்ற ஒரு குறியீடின் மூலம் அங்கு ஏற்பட்ட அரசியல் பிரச்சினைகள் நமக்கு சந்தோஷத்தைத் தருவதாகவும் அதே நேரம் அம்மக்கள் தமிழ் மேல் கொண்டிருந்த காதலை விளக்குவதாயும் உள்ளது.

                             அம்மண்ணில் வாழ்ந்த முஸ்லிம் சமுதாய மக்கள் அனுபவித்த கொடுமைகள், விடுதலைப்புலிகள் அவர்களுக்குக் கொடுத்த இன்னல்கள் மற்றும் உயிர் வேண்டி பொருள்களை, பிறந்த வீட்டை விட்டு ஓடிய பலரின் அனுபவங்களை அறியும்போது ஒன்று புலப்படுகிறது, புலிகளும் அதிகார அத்துமீறல்கள் செய்தார்கள் என்பதும் இதன்மூலம் சாமானிய மக்களின் ஆதரவையும் சிறுகச் சிறுக இழந்துகொண்டே வந்துள்ளனர் என்பதையும்.

                               இன்று போர் முடிந்த பின் இருக்கும் இலங்கை தேசம், அங்கு வாழும் தமிழ் மக்களின் நிலை மற்றும் புத்த மதத் திணிப்புகள், மகிந்தா ராஜபக்சேவின் புகழ்பாடும் டிவிக்கள், புத்த மடங்கள் மற்றும் இந்தியாவுடனான வரலாற்றுத் தொடர்பை மாற்றுவதற்கான முற்படலையும், வரலாற்றைத் திருத்தி திருப்பி எழுதவும் பழைய எச்சங்களை மறக்கடிக்கவும் செய்ய நடக்கின்ற முயற்சிகளையும் ஆசிரியர் நேரடியாக களக்காட்சியைப் பார்த்து பதிந்துள்ளார்.

                                  உலகில் உள்ள முக்கியமான மதங்களில் ஒன்றான புத்த மதம் இங்கு பெரும்பான்மையான மக்களால் பின்பற்றப் படுகிறது. அதேநேரம் புத்த மதத்தைப் பின்பற்றும் மக்களின் நம்பமுடியாத, மிகக் கொடூரமான, அசிங்கமான முகத்தை இந்தப் புத்தகம் தோலுரித்துக் காட்டுகிறது. அன்பு, அமைதி, அரவணைப்பு என நாம் நினைப்பதற்கு நேரெதிராகவே இன்று இலங்கையில் நடக்கிறது என்பதும் அங்கு மத ஒற்றுமையோ, சக மனிதனை மதிக்கும் பண்போ இல்லை என்பதும் புத்த பிட்சுகளே ஆட்சி அதிகாரத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தமிழ் மக்களை வேருடன் அழிக்க புறப்பட்டுள்ளனர் என்பதை சந்தேகமின்றி இப்புத்தகம் நிரூபிக்கிறது.

                            இப்புத்தகத்தில் உள்ள ‘இறுதி ஆட்டம்’ என்ற கடைசி அத்தியாயம் நிச்சயம் ஒரு  பதற்றமான ஒரு மனதை உருவாக்கிக்கொண்டே செல்கிறது. அதிலும் ஆனந்தி மற்றும் சந்தியா என்ற இரு பெண்களின் வாழ்க்கையை அவர்களின் வாயிலிருந்தே சொல்ல வைத்து அப்படியே பதிவு செய்திருப்பது நமக்கு துக்கத்தை பதின் மடங்கு அதிகரிக்கச் செய்கிறது. இனியேனும் இவர்களுக்கு நல்லதொரு நிம்மதியான குறைந்தபட்ச சந்தோஷமான வாழ்க்கையையேனும் கடவுள் கொடுக்க வேண்டும் என மனம் பிரார்த்திக்கிறது. இலங்கை என்ற கண்ணீர்த் துளி போல உருவம் கொண்ட தேசத்தின் கண்ணீர்க் கதைகள் இனியேனும் முடிவு பெறவேண்டும் என்றே இப்புத்தகத்தை முடிக்கும் தருணத்தில் நம் மனது ஏங்குகிறது.

                              ஒரு இன மக்களின் வீரம், அடக்குமுறை, அதன் சிறப்புகள், சண்டைகள், வெற்றிகள், தோல்விகள், துரோகங்கள் என ஒவ்வொன்றையும் அலசி ஆராய்ந்து துல்லியமாகப் புரிந்துகொள்ள இப்புத்தகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.

                                 இப்புத்தகத்தின் சிறப்பு என்னவென்றால் எளிய சொற்கள், அழகிய நுண்ணுணர்வு மிக்க வார்த்தைப் பிரயோகங்கள் ஒரு வித உயிர்ப்புடன் கூடிய அற்புதமான நடையுடன் ஒவ்வொரு பக்கமும் முன்னகர்கிறது. பல ஆழமான மனதைத் தூண்டுகிற செய்தியையும் அனாயசமான பல நிகழ்வுகளையும் நமக்கு அதிக வேதனையை மட்டுமே தராமல் துடிப்பும், உணர்வும் கலந்து ஒவ்வொரு பக்கத்தையும் விவரித்துள்ளார் ஆசிரியர். தன்னுடைய ஒவ்வொரு பயணத்திலும் கண்ட நிதர்சன உண்மைகளை, எதார்த்தத்தை மீறாத வகையிலும் அதே நேரம் இன்னும் நீளமாக பல கட்டுரைகளை எழுதுவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தாலும் சிக்கனமான, கச்சிதமான வார்த்தைகளை உபயோகப்படுத்தி தெளிவான கோர்வையில் உள்ளதை உள்ளபடி நம் கண்முன்னே நிறுத்தியுள்ளார்.

                                   இலங்கையைப் பற்றிய முழு வரலாறும் இருநூறுக்கும் குறைவான பக்கங்களை மட்டுமே கொண்டுள்ள இந்த ஒரு புத்தகத்தின் மூலமே அறிந்துகொள்ள முடியும் என்பது பெரிய விஷயமேதான். ஒவ்வொரு தமிழ் இளைஞனும், வெற்றுப் பேச்சு பேசித் திரியும் தமிழ் மக்கள் காவலர்களும் நிச்சயம் படிக்கவேண்டிய, உண்மைகளைப் புரிந்துகொள்ள கிடைக்கும் அரிய ஒரு களஞ்சியம் என்று இப்புத்தகத்தைச் சொன்னால் அது மிகையல்ல. அதேநேரம் இப்படைப்பை தைரியமாக தமிழில் கொண்டுவந்து நல்கிய ஆசிரியருக்கும், வெளியீட்டாளர்களுக்கும் தமிழன் என்கிற முறையில் நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம் என்பதும் உண்மையே.
ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/978-93-8414-902-4.html
ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

Thursday, 7 May 2015

பாலித்தீவு – இந்துத் தொன்மங்களை நோக்கி…- புத்தக விமர்சனம்

                           ஈழத் தமிழரான கானா பிரபா ஆஸ்திரேலியாவில் வசிப்பவர். அவரது பயண அனுபவமே பல கட்டுரைகளாக இச்சிறு புத்தகத்தில் விரிகிறது. பொதுவாக நல்லதொரு பயணக்கட்டுரை தொகுப்பு தமிழில் வருவது மிக குறைவு என்பது ஒரு குறையாகதான் இருந்து வருகிறது. இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பன்னிரண்டு தொடர் உலா கட்டுரைகள், இந்தோனேசியா என்ற நாட்டில் இருக்கும், பழைய இந்து கலாச்சாரங்கள் மற்றும் தொன்மங்களால் நிறைந்திருக்கும் அழகிய தீவான பாலியை பற்றியவை.
                    இந்தப் புத்தகத்தை முதலில் கையில் எடுத்தவுடன் நமக்கு ஆச்சரியத்தை நல்குவது அதன் வடிவமைப்பு மற்றும் தாள்களின் மேன்மையான தரம். இந்தப் புத்தகத்தில் மொத்தம் 150-க்கும் குறைவான பக்கங்களே உள்ளன. ஆனால் ஒவ்வொரு பக்கத்திலும் கொடுக்கப்பட்டுள்ள ஒளிப்படங்கள் நம்மை நேராகத் தூக்கிக்கொண்டு போய் அத்தேசத்தில் உலவ விடுகின்றன. மிக மிக உணர்வுப்பூர்வமான ஒரு புத்தகமாக இதை மாற்றியதில் புகைப்படங்களுக்கு மேலான பங்கு உள்ளதை இப்புத்தகத்தை காணும் யாரும் மறுக்க முடியாது. அதேப்போல் சில நொடியேனும் கனவுகள் போல் இப்படங்கள் ஒவ்வொன்றும் விரிவதையும் யாராலும் நிறுத்த முடியாது.
                      இந்தோனேசியா என்ற ஓர் இஸ்லாமிய தேசத்தில் இருக்கும் ஒரு மாநிலம் தான் பாலித்தீவு. இதன் தலைநகரமாக Denpasar என்ற ஒரு ஊர் இருக்கிறது. அங்கு செல்லவேண்டுமானால் செய்துகொள்ளவேண்டிய நடைமுறைகள், சட்டதிட்டங்கள் மற்றும் பயண விவரங்களுடன் மிக எளிதாகக் கட்டுரையை ஆரம்பிக்கின்றார் ஆசிரியர். போகப்போக விறுவிறுப்புடன் அவரது பயண சாகச அனுபங்களை மிகச் சரியான எடுத்துக்காட்டுகளுடன் கோர்வையாகத் தந்து நம்மையும் அவருடன் கையிழுத்துக் கூட்டிச்சென்று அவர் அனுபவித்த இன்பத்தை நமக்கும் தருகிறார்.

                          பாலித்தீவு என்ற பெயரே மகாபலி என்ற இந்தியக் கதையில் வரும் அசுரனின் பெயருடன் தொடர்புடையது என்ற தகவலுடன் தமிழர்கள் பெருமைகொள்ளும் விதம் நம் முன்னோர்கள் அங்கு ஆண்ட நாட்களை ஆண்டு வாரியாக, அரசர்களின் பெயர் வாரியாகத் தந்துள்ளார் ஆசிரியர். அத்தேசம் நம் மூதாதையர்கள் ஆண்ட தேசம் என்பதே நம்மை மிகவும் கர்வம் கொள்ள வைக்கிறது. அதனூடே அங்கு கட்டப்பட்டுள்ள கோயில்களும் நம்மவர்கள் கட்டியது என்பது நமக்கு மேலும் பெருமை கொள்ளச் செய்வதாகவும், வியப்பில் ஆழ்த்துவதாகவும் உள்ளது என்பது உண்மை. அப்பிரதேசத்தில் இன்றும் சூட்டப்படும் பெயர்கள் தமிழ் மொழியை சார்ந்துள்ளதையும் அதற்குப் பல எடுத்துக்காட்டுகளையும் எடுத்தியம்பி உள்ளார் ஆசிரியர். அதேபோல் தமிழ்த் திரைப்படங்களும் ஒரு காலத்தில் அங்கு திரையிடப்பட்டன போன்ற தகவல்கள் வரை பலர் அறியாத நிறைய சுவையான தகவல்களை பிரபா பதிவு செய்துள்ளார்.
                                 அங்கு இந்து கலாச்சாரம் வேரூன்றி உள்ளதையும், இப்போதும் மகாபாரதம் மற்றும் இராமாயணக் கதைகள் நடித்து காட்டப்படுவதையும், மக்களின் இந்து மத நம்பிக்கைகளின் ஆழத்தையும் மிகத்தெளிவாகத் தந்துள்ளார். அவர் அங்கு கண்டு களித்து, ஆச்சரியமாக ரசித்துப் போய் வந்த பலப்பல கோயில்களின் வரலாறு மற்றும் அதிசயங்களைப் பட்டியல் இட்டுள்ளார். அதே போல அங்கு அவர் போன சரணாலயங்கள் மற்றும் கடற்கரைகளைப் பற்றியும் பதிவு செய்துள்ளார்.
                            இந்த பாலித்தீவின் கலாச்சார இடமாகவும் மிக அதிகமான வரலாற்று பின்புலம் கொண்ட UBUD என்ற இடத்தை பற்றி அவ்வளவு தகவல்களை தந்து நம்மை வியப்பில் ஆழ்த்திவிடுகிறார் ஆசிரியர். அதேபோல் இவ்விடங்களைப் பற்றி வேற்று தேசத்தவர் எழுதிய புத்தகங்களையும் அதன் சிறப்புகளையும் நமக்கு இடையிடையே சொல்லிக்கொண்டே செல்கிறார். அங்கு இருக்கும் சிவன் கோவில், விஷ்ணு கோயில், சரஸ்வதி கோயில், தண்ணீர் கோயில், யானை குகை கோயில் மற்றும் கடலினுள் இருக்கும் Tanah lot என்ற பெயர் கொண்ட கோயில் எனப் பல கோயில்களின் அமைப்பு மற்றும் கட்டடக் கலையைப் பற்றியும் மிக செறிவான விளக்கத்தை படிக்கும் அனைவரும் புரிந்துக்கொள்ளும் வண்ணம் தந்துள்ளார். அங்கு செல்பவர்கள் வாங்கி வரவேண்டிய கலைப்பொருட்கள் மற்றும் அவை வாங்கவேண்டிய இடங்கள் மற்றும் உணவு விடுதிகளின் தரம் மற்றும் சேவைகள் என ஒரு வாசகன் மற்றும் சுற்றுலா செல்ல விழைபவர் எதிர்நோக்கும் அத்தனை தகவல்களையும் ஒருங்கே தெளிவாக தந்துள்ளார் ஆசிரியர். அதேபோல் ஆசிரியர் சந்தித்த பிரச்சனை மற்றும் அதைத் தீர்க்கும் எளிதான வழிமுறைகளையும் இப்புத்தகத்திலேயே கூறியுள்ளார் ஆசிரியர். இதேப்போல் இன்னும் பல உலாத்தல் கட்டுரைகள் அடங்கிய புத்தகங்கள் நிறைய தமிழில் வெளிவர வேண்டும் என்றே இதைப் படிக்கும் அனைவரும் விரும்புவர். அத்தகைய சிறப்பானதொரு புத்தகமாகவே இது வெளிவந்துள்ளது. இந்த புத்தகத்தையே இதே போன்று எதிர்காலத்தில் வெளிவரும் பயணக்கட்டுரை புத்தகங்களின் தரச்சான்றின் குறியீடாக கொள்ளலாம் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் இல்லை.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0002-466-8.html
போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234

Wednesday, 22 April 2015

கோயிலுக்குள் நுழையாதே - புத்தக விமர்சனம்

                                தென்னிந்தியா சமூக வரலாற்றின் பக்கங்களில் உள்ள பல தெரியாத நிஜங்களை புரியவைக்கவே எழுதப்பட்ட ஒரு நூல் என்பதை ஆசிரியர் முதலிலேயே தெரியப்படுத்துகிறார். இன்றைய காலகட்டத்தில் பல வரலாற்று நிகழ்வுகளை தங்களுக்கு சாதகமாக வளைத்தும், இல்லாததை வரலாற்றில் இருப்பதாகவும் சொல்லித் திரியும் அனைத்து சமூக விரோதக் கும்பல்களுக்கும் இந்நூல் ஒரு சம்மட்டியடி என்றால் பொய்யல்ல.





                           இந்நூல் இராமநாதபுரம் மாவட்டம் கமுதி (கௌமுதி) என்ற ஒரு ஊரில் நடந்த சம்பவத்தையும் அதன் மூலம் ஏற்பட்ட இருசாரார்க்கான பிரச்சனைகளையும் பற்றிதான் சொல்கிறது. அதேநேரம் அந்தப் பிரச்சனைகளின் மூலச்சரடையும், அதன் பின் தொடர்ச்சியாக நடந்த நீதிமன்ற வழக்கின் சாராம்சத்தையும் ஆண்டுவாரியாக, நாள் வாரியாக முழுமையாக ஒரு வழக்கின் மொத்த நிகழ்ச்சிகளையும் தெளிவுபட அனைத்து வாதி, பிரதிவாதிகளின் வாக்குமூலங்கள் அதற்கு அப்போதைய நீதியரசர் வழங்கிய தீர்ப்புகள் மற்றும் அந்தத் தீர்ப்புகளின் நுண்ணரசியல் என ஒவ்வொரு விடயத்தையும் அலசி ஆராய்ந்து நடுநிலைமையுடன் எழுதப்பட்ட ஒரு புத்தகம்தான் இது.

                         அதிலும் இப்போது தமிழ்நாட்டில் நிலவிவரும் சில பல எழுத்தாளர்களுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் பிரச்சனைகளை நினைக்கையில் இவ்வாசிரியர் எந்தவொரு நிகழ்ச்சியையும் மறைக்காமல் வரலாற்று எழுத்தாளன் கடைப்பிடிக்க வேண்டிய அத்தனை நேர்மையையும், அதற்கான பெரியதொரு ஆதாரங்களையும் திரட்டி எழுதியிருப்பது பாராட்ட வேண்டிய விஷயம்தான். நம் நாட்டில் நம்மைப் பற்றி வேற்று நாட்டு ஆங்கிலேயன் எழுதுவதுதான் உண்மை என்று நம்பித் திரியும் இன்றைய சமூகத்தின் முன் நம் நாட்டில் இருக்கும் இது போன்ற ஆசிரியர்களின் முயற்சி மனமுவந்து பாராட்டுக்குரியதே.

                        இந்நூல் கமுதி என்ற ஊரில் இருக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்குள் சான்றோர் அல்லது நாடார் எனப்படும் சமூகத்தினர் நுழைந்து வழிபடுவதை தடுக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மொத்த விவரம், அதற்கு மதுரை சார் நீதிமன்றத்தில் 1899-ஆம் ஆண்டு நீதிபதி டி. வரதராவ் அவர்கள் வழங்கிய தீர்ப்பு ஆகியவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பாகும். அந்த ஊரில் இருந்த தேவர்கள் மற்றும் சான்றோர் மக்களிடையே இருந்த ஒற்றுமையையும் பின்னர் வந்த சிறு உரசலை வைத்து சென்னை உயர்நீதிமன்ற ஆங்கிலேய நீதிபதிகள் எப்படி பிளவை பெரிதுபடுத்தினர் என்பதை இந்நூல் நமக்கு விலாவாரியாக புரியவைக்கிறது. அதேபோல் மதமாற்றத்துக்கு இதைப் போன்ற பல சூழ்நிலைகளை ஐரோப்பியர்கள் எப்படி தமதாக்கி மதமாற்ற அறுவடையை திறம்படச் செய்தனர் என்பதையும் அறிய முடிகிறது.

                          ஒவ்வொரு சாதி மக்களின் பலதரப்பட்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள் மூலம் நமக்கு அந்தக் காலகட்டத்தில் ஒவ்வொரு சாதி மக்களின் தினசரி வாழ்க்கை முறை, அவர்களின் சம்பிரதாயங்கள், சடங்குகள் மற்றும் ஊர் மரியாதை மற்றும் வன்முறைகளையும் புரிய முடிகிறது. இன்று தென் இந்தியாவில் மிக பெரும்பான்மையான நாடார் சமூகத்தினர் திட்டமிட்டு மதம் மாற்றப்பட்டனர் என்பதும் அவர்கள் தங்களின் முன்னோர்களின் பெருமைகளை அறியவே முற்படவில்லை என்பதும் இப்புத்தகத்தில் நூற்றுக்கணக்கான ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

                       இன்று அரசியல் ஆதாயம் தேட பலர் சொல்லித் திரிவதைப் போல சான்றோர் சமூகத்தினரை கோயிலுக்குள் நுழைய அனுமதி கொடுக்கப்படவில்லை என்பது முழுப் பொய் என்பதை ஆசிரியர் மிக பலமான உண்மையான ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளார். கி.பி. 13 ஆம் நூற்றாண்டிலேயே திருச்செந்தூர் பகுதியில் மிகப்பெரிய மளிகை வணிகக் கிடங்குகள் வைத்திருந்து ஏற்றுமதியிலும் உள்நாட்டு வணிகத்திலும் சான்றோர்கள் ஈடுபட்டிருந்தனர் என்பதைப் போன்ற பல தகவல்கள் இதில் கூறப்பட்டுள்ளது. நாயக்கர் ஆட்சியின் வரவினால் அக்காலத்தில் அரசியல் அதிகாரத்தை சான்றோர் இழந்தனர். அதேபோல் அந்நேரம் வேறு சமூகத்தினர் அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் கட்டமைத்துக் கொள்ளத் தொடங்கினர். அதை முறியடிக்கவும் தங்களின் சமய அந்தஸ்தினை மீட்டெடுக்க நடந்த முயற்சியினையும் ஒப்பிட்டு நோக்கும்போது இந்த கோயில் நுழைவு விவகாரம் சற்றென நமக்கு விளங்கிவிடுகிறது.

                        1870 ஆம் ஆண்டிலேயே விருதுநகரில் சத்திரிய பானு வித்யாசாலா என்ற பள்ளியை சான்றோர் சமூகத்தினர் நடத்தி வந்தனர் என்பதும் அப்பள்ளியில் அனைத்து சமூகத்து மாணவரும் படித்து வந்தனர் என்பதும் நாம் சிந்திக்க வேண்டிய ஒரு முக்கிய தகவல். சான்றோர் சாதியினரைப் பார்த்தாலே தீட்டு என்று வேற்று சமூகத்தினர் ஒதுக்கி வைத்திருந்தனர் என்பது எவ்வளவு பெரிய பொய் என்பதும் அப்படி ஒரு வழக்கம் இருந்திருந்தால் இப்பள்ளியில் எப்படி மற்ற சமூகத்து மக்கள் பிள்ளைகளை அனுப்பினர் என்பதும் யோசிக்கவேண்டிய விடயம்தானே? கண்டாலே தீட்டு என்ற நிலையில் சான்றோர் மக்கள் இருந்தனர் என்றால் எப்படி இவ்வளவு பெரிய பொருளாதார வசதியுடன் இவர்கள் இருந்திருப்பார்கள் என்ற கேள்வியையும் அதற்கான பல தரவுகளுடன் கூடிய விடையையும் இந்நூல் சொல்கிறது.

                    அதேநேரம் இந்த வழக்கில் வழங்கிய தீர்ப்பில் நாயன்மார்களின் சாதிகள் விஷயத்தில் பிராமணர், சத்திரியர், வைசியர் மற்றும் வேளாளர் என்ற பட்டியல் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதும்கூட தமிழகத்தில் நான்கு வர்ணங்கள் இருந்ததை உறுதிபடுத்துகிறது. இதேபோல் பண்டைய இந்தியாவில் திராவிடம் வேறாகவும் சேர தேசம், சோழ தேசம் மற்றும் பாண்டிய தேசம் ஆகியன வெவ்வேறாகவும் இருந்தன என்பது போன்ற தகவல் புதியதாகவே உள்ளது. கால்டுவெல் போன்றவர்கள் அவர்கள் அறிந்த சில விஷயங்களையும், புரிந்துகொண்ட சில பல தகவல்களையும் முன்வைத்து சில முடிவுகளை அலசி ஆராயாமல் எழுதியுள்ளனர் என்பதும் புலனாகிறது. திருமணம் போன்ற சான்றோர்களின் நிகழ்வுகளின்போது பல்லக்கு பவனி வருவதும் அவர்களின் பல்லக்கை மறவர்கள் சுமப்பதும் வழக்கம் என்பதும் அது ஒரு சடங்காகவும் இருந்ததையும், அது இரு சமூகத்தினர் அங்கீகரித்த ஒரு செயல் என்பதோடு மட்டுமில்லாமல் இரு வேறு சமூகத்தினரின் அந்நியோன்யமான ஒரு வாழ்க்கை முறையும் அந்த ஊர் மக்களுக்கிடையில் இருந்ததையும் தெளிவாகச் சொல்கிறது.

                        சான்றோர்கள் தங்களை சத்திரியர்கள் என்று கூறிக்கொண்டதையும் அதை வேற்று சமூகத்தினர் அங்கீகரித்தும் இருந்தனர் என்பது, இவர்கள் மிகவும் கவுரவமாகவும் மரியாதையுடனும்தான் இருந்தனர் என்பற்கு எடுத்துக்காட்டாகும். அதேபோல் பிராமண புரோகிதர்கள் நாடார்களின் சுப-அசுபச் சடங்குகளை நிகழ்த்தி வைப்பதும் அப்போது வழக்கத்தில் இருந்ததையும் பலரது வாக்குமூலங்கள் தெளிவாக்குகின்றன. மிகச் சிறந்த அமைப்பாகும் திறன் கொண்ட சான்றோர் சமூகத்தினரும், உயிருக்கு அஞ்சாத போர்க்குணம் கொண்ட மறவர்களும் ஒரு அணியில் இருந்தால் வருங்காலத்தில் தங்களுக்கு அது பெரிய தொல்லையாக மாறும் என்பதை சரியாக கணித்து ஒரு பதற்றமான சூழ்நிலைகளை உருவாக்கி வைத்துக்கொண்டு இரு சமூகத்தினரையும் வேறுபடுத்தினர் ஆங்கிலேயர்கள்.

                         சிவகாசியிலும் இந்த சமகாலத்தில் சான்றோர் சமூகத்துக்கு எதிராக மறவர் சமூகத்தினர் மிகப்பெரும் தாக்குதல் நடத்தினர் என்பதும் அந்நேரத்தில் ஏற்பட்ட ஒரு சமூக ஸ்திரமின்மையை கோடிட்டுக் காட்டுகிறது. இதன் பின்னால் இருந்த பல சூழ்ச்சிக்காரர்களைப் பற்றியும் இந்நூல் விவரிக்கிறது. செட்டியார் சாதி, பிராமண சாதி, மற்றும் பல சாதி மக்களின் வாக்குமூலங்கள் என இந்நூலில் பல அரிய உண்மைத் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. பத்ரகாளியம்மன் சத்ரியர்களின் கடவுளாகும். சான்றோர் சமூகத்தவரை காளி புத்திரர்களாக வலங்கைமாலைக் குறிப்பிடுகிறது போன்ற அனைத்துத் தகவல்களையும் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

                       இந்த வழக்கு நடைபெற்றபோது மற்ற மாவட்டங்களில் நாடார் சமூகத்தினர் வாழ்ந்த விதம், அவ்வூரில் இருந்த நடைமுறைகள் மற்றும் இந்து மக்களின் வரலாறு, சாதி அடுக்கின் நிலைப்பாடுகள் என பலதரப்பட்ட ஆய்வறிக்கைகளும் இதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. பல கோயில்களில் இருந்த நடைமுறைகள், பூஜை முறைகள், அதை செயல்படுத்தும் உரிமை கொண்ட சாதிகள் மற்றும் வேறுவேறு மாவட்டங்களில் இருந்த வித்தியாசமான பழக்கங்கள் மற்றும் சாதி மக்களின் முன்னுரிமைகள் என பல விடயங்களை ஒரே புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். ஆதலால் மிக அதிகமான தகவல் நிரம்பி வழிவது நமக்கு நினைவில் வைத்துக்கொள்ள கொஞ்சம் சிரமமாகவே உள்ளது.

                          இதை ஒரு புத்தகம் என்ற முறையில் வாசிப்பதை விட அக்காலகட்டத்தின் கண்ணாடி என்ற முறையில் ஒவ்வொரு பக்கத்தையும் நிதானமாகப் புரிந்து யோசித்து வாசிக்க வேண்டிய தேவை உள்ளது என்பதே உண்மை. இப்புத்தகத்தை எழுதுவதற்கு ஆசிரியர் எவ்வளவு தகவல்களைச் சேகரித்து இருப்பார் என்பதை நினைக்கும்போது மலைப்பாகவே உள்ளது. ஆனால் அதை மிக நேர்த்தியாக நமக்கு வழங்குவதற்கு எடுத்திருக்கின்ற சீரிய முயற்சியும் இப்புத்தகத்தில் தெளிவாகக் காண முடிகிறது. இதேபோல் இன்னும் பல புத்தகங்கள் வரவேண்டும் என்பதே நமது விருப்பமாகும்.

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/100-00-0000-808-3.html
ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

Friday, 27 March 2015

மருந்தில்லா மருத்துவம் - புத்தக விமர்சனம்

                                                 நம் குழந்தைகள் பிற்காலத்தில் எவ்வாறு இருக்கும் என்பது நாம் இன்று வளர்க்கும் முறையில்தான் இருக்கிறது என்பது நாம் அறிந்ததே. ஆனால் பொதுவாக கண்ணுக்குத் தெரிந்த உடலையும் அதன் வளர்ச்சியையும், அயற்சியையும்தான் கவனத்தில் கொள்கிறோம். அவர்களுக்குத் தேவையான உணவையும் உடையையும் பற்றி தான் பெரிதாக சிந்திக்கிறோம். ஆனால் நம் கண்களுக்குப் புலப்படாத உயிருக்கும் உடல் வளர்ச்சிக்கும் மூலமான மன ஆரோக்கியத்தையும், மன நெருக்கடிகளையும் பற்றி பெரிதாக யோசிப்பதே இல்லை. அவர்களின் உள்மனதின் அலைகளை கண்டுகொள்வதே இல்லை என்று இந்நூலின் ஆசிரியை ஆதங்கம் கொள்கிறார்.





                                 இந்தப் புத்தகத்தில் ரெய்கி என்கிற மிக வலுவான மருத்துவமுறை மூலம் இந்தக் குழந்தைகளின் பிரச்சனைகளுக்கும் அதோடு மட்டும் அல்லாமல் இன்றைய நவீன காலத்தில் எல்லா வயதினர்க்கும் வரும் விதவிதமான நோய்களுக்கும் மிக எளிய சிகிச்சை மூலம் நிவாரணம் கிடைக்கப் பெறலாம் என்பதையும் கூறியுள்ளார்.

                            அதிலும் ஒரு குடும்பத்தில் இருக்கும் சிறுவர்கள், இளைஞர்கள், குடும்பத்தலைவி, அலுவலகங்களில் வேலை செய்யும் நடுத்தர வயதுக்காரர்கள், முதியோர்கள் என அனைத்து வயது மனிதர்களுக்கும் வருகின்ற வியாதிகளையும் தீர்க்கும் என்பது “ரெய்கி” இயற்கை சக்தி மருத்துவத்தின் சிறப்பு என்றே சொல்லவேண்டும். அதுவும் எந்தவிதமான அறுவைசிகிச்சையோ, மாத்திரைகளோ, ஊசியோ, பக்கவிளைவுகளோ இல்லாமல் உடலை சில தொடுதல்கள் மூலமும் தொடாமல் காற்றின் சக்தியைப் பாய்ச்சுவதன் மூலமும் தீராத நாள்பட்ட வியாதிகளையும் குணப்படுத்த முடியும் என்பது அனைவருக்கும் ஆச்சரியம் கலந்த சந்தோஷத்தையே தரும். இதில் எந்த விதமான அமானுஷ்ய சக்தியோ, மந்திர தந்திரங்களோ இல்லாமல் முழுவதும் அறிவியல் முறைப்படி தான் “ரெய்கி” என்கிற மருத்துவ சிகிச்சை முறை நடைபெறுகிறது என்பது மேலும் நம்பகத்தன்மையைக் கூட்டுவதாகவே இருக்கிறது.

                             அதிலும் இந்த மருத்துவ முறைகூட இந்தியாவில் இருந்து பழங்காலத்தில் தெற்காசியாவின் பல நாடுகளுக்கும் பரவியது என்பதும் நாம் மறந்து, மறைந்துபோன ஒரு மருத்துவமுறை மீண்டும் டாக்டர் மிகாவோ யுஸி என்ற மேதையால் உயிர்பெற்று பல தேசங்களில் பரவி நம் நாட்டிலும் இப்போது வளர்ந்துகொண்டே வருகிறது.இப்புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் வாசித்துக்கொண்டே போகையில் மனம் பரபரக்கிறது என்பதே நிஜம். அதற்குக் காரணம் இதில் கூறப்பட்டுள்ள நோய்களின் பட்டியல், அது வருவதற்கான காரணம், அதன் விளைவுகள், அதனால் உருக்குலைக்கப்படும் உடல் உறுப்புகள் என்பன போன்ற தகவல்கள் நமக்கு ஒரு முன்னெச்சரிக்கை என்பது திண்ணம். ஆனால் ஆசிரியை அடுத்தடுத்த பக்கங்களில் அதற்கான எளிய தீர்வையும் சட்டென அனைவரும் புரிந்துகொள்ளும் படியும் எளிய தமிழில் ஆங்கிலப் பெயர்களைச் சொல்லி பயமுறுத்தாமல் தந்துள்ளது நிச்சயம் இப்புத்தகத்தின் சிறப்பேயாகும்.

                               அதிலும் ஆசிரியை இப்புத்தகத்தில் மனித உடம்பில் இருக்கும் ஒவ்வொரு பகுதியையும், உறுப்புகளையும் பகுத்தாய்ந்து அதை பாதுகாக்க வேண்டிய வழிமுறைகளையும் தெளிவாக விளக்கியுள்ளார். ஒரு பெண் கர்ப்பம் ஆகும் நாள் முதல் செய்ய வேண்டிய குழந்தைக்கான நோய் தடுப்புமுறைகள், மற்றும் பிறப்பு முதல் இருபத்தியொரு வயது வரை உள்ள ஒவ்வொரு பருவத்திலும் எது செய்யலாம், செய்யக்கூடாது என்பதையும் நேர்த்தியாக எடுத்துக்காட்டுகளுடனும் சொல்லியுள்ளார். அதேபோல் ஒரு தாயின் கருவறையில் குழந்தை இருக்கும்போது உருவாகும் உயிர் சக்தியின் சக்கரங்களையும், குழந்தை பிறந்தபின் உருவாகும் சக்கரங்களையும், அச்சக்கரங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் உடல் உறுப்புகளையும் (ஆங்கிலப் பெயர்களுடனும்) படிப்பவர்க்கு புரியும்படியும் விவரித்துள்ளார்.

                                 மனித உடம்பில் இருக்கின்ற ஏழு விதமான சக்கரங்களையும் அதை சரியாகப் பேணாமல் இருந்தால் வரும் நோய்களையும் அதற்கு அறிவியல் முறைப்படி செய்யும் “ரெய்கி” சிகிச்சை முறைகளையும், பின்பற்ற வேண்டிய தியான முறைகளையும், பயிற்சி முறைகளையும் ஐயம் திரிபட விளக்கியுள்ளார். இன்றைய மக்களின் பழக்கவழக்கங்கள் அதன் மூலம் வளரும் தலைமுறை படும் அல்லல்களும் அதற்கான பரிகாரங்களையும் ஒரு அம்மா தன் பிள்ளைக்குச் சொல்வதைப் போல ஆலோசனையும் அதேநேரம் அக்கறையுடன் கூடிய கோபத்தில் சில வினாக்களையும் வினவியுள்ளார்.

                               நம் முன்னோர் உடம்பைப் பேண கற்றுத் தந்த எளிமையான வழிமுறைகளையும் உணவு முறைகளையும் அதன் அறிவியல் விளக்கங்களையும் தெளிவுபடக் கூறி இன்றைய அறிவியல் நூறு சதவிகிதம் நம்பும்படியானது அல்ல என்பதை நாசாவா? நாசமா? என்னும் தலைப்பில் நாசூக்காக நையாண்டியுடன் நம் இளம்தலைமுறையினர் உணரும்படி சொல்லியுள்ளார். இதற்கும் மேல் இப்போது இந்தியாவையே பீதியில் அலற வைத்துக்கொண்டிருக்கும் பன்றிக்காய்ச்சலைப் பற்றியும் அதைத் தடுப்பதற்கான எளிய ஆலோசனையும் கூறப்பட்டுள்ளது.

                                 இப்புத்தகத்தின் பல இடங்களில் திருமூலர் மற்றும் திருவள்ளுவர் ஆகியோரின் செய்யுள்களையும் அதன் பொருள்களையும் எடுத்தியம்பி ஒவ்வொரு கட்டுரையின் தன்மைக்கேற்ப விளக்கியிருப்பது நம் முன்னோர்களின் பெருமையையும் நூல் ஆசிரியையின் பரந்த அறிவையும் கண்ணோட்டத்தையும் காட்டுவதாகும். இப்போது இருக்கும் நிலையில் ஒருவர் மருத்துவமனைக்கு ஒரு நாள் சென்று வந்தால்கூட ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்யவேண்டும் என்பது ஊரறிந்த உண்மை. இந்நிலையில் நாம் வரும்முன் காப்பதே சிறந்தது என்பதையும் அதற்கான பல துணுக்குகளையும் ஆசிரியை பல இடங்களில் விதறி உள்ளார் என்பது இப்புத்தகத்தில் ஒரு சிறந்த விடயம் தான்.இந்தப் புத்தகத்தில் சில எழுத்துப் பிழைகள் இருப்பதும், அதேபோல் இன்னும் சில படங்களையும் இணைத்து இருந்தால் முதல் முதலாக உடலைப் பற்றிய ஒரு புத்தகத்தைப் படிக்கும் இளம் வயதினர்க்கும் சிறு சந்தேகங்கள் கூட எழாதபடி தெளிவாக இருந்திருக்கும்.

                                 இந்நூல் ஆசிரியை டாக்டர் பி.எஸ். லலிதா அவர்கள் மிக நுட்பமான அறிவியல் சிக்கல்களைப் பற்றியும், உடம்பின் கூறுகளைப் பற்றியும், நோய்களின் வகைகளைப் பற்றியும் தடுப்புமுறைகள் பற்றியும் அதன் பெயர்களையும் மிக இலகுவான நடையில் அனைவரும் புரிந்துகொள்ளும்படியும் எழுதியிருப்பது நிச்சயம் சமீபத்தில் வெளிவந்த பல மருத்துவப் புத்தகங்களில் இருந்து இதை வேறுபடுத்திக் காட்டுகிறது என்பதே உண்மையாகும்.
ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/100-00-0002-366-8.html
ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

Tuesday, 30 September 2014

மனித உணர்வு

                                      மனித உணர்வு


                          உணர்வு என்ற சொல் எங்கேயாவது பார்த்தாலோ கேட்டாலோ கூட மனித மனம் உடனே உடல் சார்ந்தே அதை பொருட்படுத்தி பார்க்கிறது அல்லது யோசிக்கிறது. இதில் காதல் ,காமம் என்ற உணர்வுகள் தான் பல மனங்கள் எப்போதும் அசைபோடும். இந்த உணர்வுகள் ஏன் வந்து பலபேர்களின் வாழக்கையை புரட்டிப்போட்டுவிட்டு செல்கிறது என்று பல பேர் பல நேரங்களில் யோசித்ததுண்டு.ஏன் அதோடு நில்லாமல் பல அழகான, அன்பான மனிதர்களை கல்லறைக்கும் அனுப்பிய பெருமை உள்ள உணர்வுகள் இவைத்தான். கமல்ஹாசன் ஒரு பாடலில் இதை அழகாக பதிவு செய்திருப்பார் . “காதல் ஒன்னும் கடவுள் இல்லையடா, இந்த எழவு எல்லாம் ஹார்மோன் செய்யும் கலகம் தானடா” என்று. ஆனாலும் யாரும் அதை நம்பவும் அதை உட்கொள்ளவும் தயாராக இல்லை.ஏன் என்றால் அதை இப்போதும் பலபேர் தெய்வீகத்துடன் ஒப்பிடுகின்றனர். அது அப்படிப்பட்டதா என்று இப்போது பல ஆராயிச்சிகள் செய்து ஒரு தெளிவான முடிவுக்கு மருத்துவ உலகம் வந்துள்ளது. ஏன் இப்படி மனித மனம் ஒரு வித பதற்றத்துடன் இதை கைக்கொள்ளுகிறது என்றும் ஆராய்ந்து முடிவுகளை கண்டறிந்துள்ளனர்.

                                                   
                                      தனியாக மனித உடலில் உள்ள இரசாயன சுரப்பிகள் பல விதமான இராசயனங்களை பல நேரங்களில் சுரக்கின்றது.அது மனிதன் உண்ணுகின்ற உணவை செரிமானம் செய்ய வைப்பது முதல்  உடலில் ஏற்படுகின்ற காயங்களை செரி செய்வது வரையான பல செயல்களை மனிதனின் மனம் கூட அறியாவண்ணம் செவ்வனே செய்து கொண்டிருக்கிறது. இதேப்போன்றதொரு சுரப்பிகள் சுரக்கின்ற ஒருவித இரசாயனம் தான் “ஓக்ஸ்ஸிடோசின்” மற்றும் “டோபமைன்”.  இதை மருத்துவ விஞ்ஞானிகள் இப்போது தனித்தனியாக பிரித்து எடுத்துள்ளனர் .இந்த இரு மூலக்கூறின்/இரசாயனத்தின் வேலைகள் சிறிது அல்ல. 


                           இந்த இரு மூலக்கூறு தான் மனிதனை காமப்பார்வை வீச வைப்பதும், காம களியாட்டங்கள் செய்ய தூண்டுவதும்,பங்காளியிடம் நம்பிக்கையுடன் நடந்து கொள்வதற்கும் , சில பல நேரங்களில் அடி ஆழ மனதில் ஒரு அழகான காதலை அல்லது ஒரு வித பாசத்துடனான நட்பை கூட தூண்ட செய்கிறது.இதை விட பயங்கரமான ஒரு வித காம தாபத்தையும் , ஒரு வித ஆக்ரோஷமான அல்லது ஒரு பெண்/ஆணை அடைய வேண்டும் என்றும் புணர வேண்டும் என்றும் ஒரு விதமான அடங்கா தேடலையும் கொள்ள செய்வது இந்த மூலக்கூறுகள் தான்.இந்த மூலக்கூறை 1990-ஆம் ஆண்டு வாக்கில் கண்டுப்பிடித்து விட்டனர்.ஆனால் அப்போது இது தாய்மை உணர்வை தூண்டக்கூடிய ஒரு இரசாயனம் தான் என்று கணித்தனர். ஆனால் இப்போது அதை பற்றிய விரிவான ஆராய்ச்சிகளின் பயனாக இந்த தகவல்கள் வெளிப்பட்டுள்ளது.


                            இப்போது இதை கண்டுபிடித்ததற்கு அவர்களை பாராட்டுவதைவிட திட்டுவதே செரியாக இருக்கும் என்று நினைக்கிறேன் . ஏன் என்றால் இனி காதலர்கள் தெய்வீக காதல் என பொய் சொல்லவும் முடியாது. ஏன் என்றால் தெளிவான ,விவரமான “யோக்கியர்கள்” உனக்கு “ஓக்ஸ்ஸிடோசின்” கொஞ்சம் அதிகமா சொரக்குது கொஞ்சம் நல்ல டாக்டரா பார்த்து கட்டுப்பெடுத்த ஊசி போட்டுக்கோ அப்படின்னு சொல்ல போகிறார்கள்.

                      
                                                       இதை இனி மாத்திரை போட்டு விற்பார்கள்.     பல கணவன்மார்கள், மனைவிகள் மற்றும் காதலர்கள் இதை வாங்கி தின்னவும் செய்வார்கள் இன்னும் சில வருடங்களில். இனி பல பல உணர்வுகளுக்கும் தனி தனியாக மாத்திரைகள் விற்பனைக்கு வரும். எந்த உணர்வு கொஞ்சம் கம்மியாக இருப்பதாக உணர்கிறோமோ அதை வாங்கி வைத்துக்கொண்டால் போதுமானது.அப்போதும் சூடு , சொரனைக்கென்று மாத்திரை வருமோ என்னமோ. ஏன் என்றால் பல “அரசியல்வியாதிகளுக்கு” அதை கலக்கி கொடுத்தாவது நம் நாட்டை நன்றாக்கி விடலாம் என்ற பேராசை தான் மனதில்... 

Monday, 15 September 2014

கலைகின்ற கனவுகள் – I

                                                                  கலைகின்ற கனவுகள் – I

                                     எவ்வளவு ஆசைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுடன் நாம் ஒவ்வொருவரும் வாழ எத்தனித்து கொண்டே இருக்கிறோம். ஒரு கனவு கலைவது என்பது எவ்வளவு பெரிய வலிகளை நமக்கு தருகிறது. நம் கனவுகள் பெரும்பாலும் தன்னலம் சார்ந்ததாக மட்டும் இருப்பதில்லை.


                                              நம்முடைய கனவுகளில் அல்லது எண்ணங்களில் நமது சுற்றத்தார் அல்லது நமக்கு மிகவும் பிரியமானவர்களுடன் ஒரு வாழ்கையை அந்த கனவுகளுடன் பயணப்பட முற்படுகிறோம். ஆனால் அது உடைந்து நம்மையும் நம் கனவுகளுடன் சேர்ந்து பயணிப்பவர்களையும் திசை மாற்றி செல்ல வைக்கிறது என்பது மிக பெரிய வேதனை என்பது ஒரு எலி கூண்டுக்குள் அகப்பட்டுக்கொண்டு விடுபட எத்தனிப்பதை போன்றது என்றே கருத தோன்றுகிறது.சில கனவுகள் சிதையும்போது ஒரு தலைமுறையே கருகும் பிளாஸ்டிக் பைகளை போல படராமல் இருக்க ஒரு வித வேதனையுடன் சகித்து ஜீரணிக்க முற்படுகிறோம். ஆனால் சில கனவுகள் உடைந்தால் பின் அதை யாதொரு காலத்திலும் அதை திரும்ப பெறுவதற்க்கான வாய்ப்புகள் இல்லாமலேயே மனித வாழ்க்கை முடிந்து போவது நிச்சயம் ஒரு மனமரணம் தான்..


                                                                        வண்டி

                                         ஒரு குழந்தை வளரத்தொடங்குவது முதல் வாகனங்கள் அல்லது வண்டிகள் ஒரு பிரமிப்பூட்டும் ஆச்சரியமாக தான் இருக்கிறது.ஒரு பெரிய வாகனம் ஒரு அழகு தான். ஒரு மனிதனின் வாழ்கையை ஒரு வாகனம் எவ்வளவு கச்சிதமாக மாற்றி விடுகிறது. ஒரு பேருந்தையோ, ஒரு வேனையோ , ஒரு ஷேர் ஆட்டோவையோ, ஒரு லாரியையோ வைத்துக்கொண்டு ஒரு குடும்பத்தை மிகவும் அழகாக நகர்த்திக்கொண்டு செல்லும் எத்தனை அப்பாக்கள் இன்று நம்மிடையே இருக்கின்றனர். எத்தனை குழந்தைகள் அப்பாக்களின் அந்த அழகிய வாகனங்களில் ஒரு வித ஆசை , சந்தோஷத்துடன் ஏறி அமர்ந்து செல்கின்றனர். எத்தனை மனைவிமார்கள் தங்கள் கனவுகளை அந்த ஒரு வாகனத்துடன் இணைத்துப்பார்க்கின்றனர். ஒரு வாகனம் வைத்திருக்கும் ஒரு அப்பாவுக்கு அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்துக்கொண்டு தன் மகள் ,மகன்களின் படிப்பு மற்றும் உணவு உடைகளுக்கு வசதி ஏற்படுத்த பாடுபடுகின்றனர் .அதில் கிடைக்கும் வருமானத்தை சிறுக சேமித்தும் அதை நம்பியும் தான் பல குடும்பங்களுக்கு பல கனவுகள் மெய்பட்டுக்கொண்டு இருக்கிறது என்பது உண்மையே. ஒரு பெண் பிள்ளையின் கல்யாண கனவுகள் , ஒரு வயதான அப்பா , அம்மாக்களின் மருத்துவ செலவுகள் என அனைத்தையும் ஒரு வாகனத்தை வைத்துக்கொண்டு நிறைவேற்றும் எத்தனை அப்பாக்கள் இங்கு இருகின்றனர்.எத்தனை தங்கைகளின் தம்பிகளின் வாழ்கையை அண்ணன்கள் ஒரு வாகனத்துடன் பூர்த்திப்பெற வைக்க உழைகின்றனர். எத்தனை சிரமங்களின் இடையில் இன்று ஒரு வண்டி மட்டுமே வைத்துக்கொண்டு எத்தனையோ சாதாரணமானவர்கள் வாழ்க்கையை சாதுரியமாக முன்னெடுத்துச் செல்கின்றனர். 


                                                   எவ்வளவு எதிர்பார்ப்புகளுடன் ஒரு மனிதன் தங்கைகளின், மனைவியின் , பெற்ற தாயின் தாலி மாலையை கழற்றி விற்றோ அடமானம் வைத்தோ, பல தெரிந்த தெரியாத நபர்களிடம் கடன் வாங்கி ஒரு ஆட்டோவோ,லாரியோ,டம்போவோ வாங்குகின்றனர். அதில் நிச்சயம் நேர்த்தியாக வருமானம் வரும் தம் குடும்ப தேவைகள் நிறைவுப்பெறும் வாழ்கையை இனிதாக முன்னெடுத்துச் சென்றுவிடலாம் என்ற கனவுகளுடன் சில பல மனக்கணக்குகள் மற்றும் பணக்கணக்குகளுடன் தான் ஒரு வாகனத்தை ஒரு ஷோவ்ரூமில் இருந்து எடுத்து வருகின்றனர். எத்தனை கடவுள்களுக்கு அர்ச்சனைகள், வழிபாடுகள்,நேர்த்திகடன்கள் என செய்து அந்த வாகனத்தை வீட்டின் முன் கொண்டு நிப்பாட்டும் போது ஒரு குடும்பமே அல்லது ஒரு மனித வாழ்க்கையே அதை ஒரு கடவுளாக ஒரு வரம் தரும் கோயிலாக பார்க்கிறது.எத்தனை எதிர்கால கனவுகள் அந்த சில கணங்களில் அந்த குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தினர்க்கும் வந்து போகிறது.

                                                     ஒரு முறை யோசித்து பாருங்கள் மொத்த இந்தியாவில் எத்தனை கோடி வாகனங்கள் அதில் எத்தனை பேர் ஒரே ஒரு வாகனத்தை மட்டும் நம்பி வாழும் மனிதர்கள். எத்தனை குடும்பங்கள் ஒரு வாகனத்தை மட்டும் வைத்துக்கொண்டு வாழ்கையை ரசனையுடன் வாழ முற்படுகின்றனர். ஒரு விதமான பிரமிப்பு வராமல் இல்லை.சில பல ஆயிரங்களை மட்டுமே வருமானமாக தரும்  என்று தெரிந்தும் .சொந்த வாகனத்தை வாங்க பல ஓட்டுனர்களும் விரும்புவது தான் யாரிடமும் கைகெட்டி வேலை பார்க்க வேண்டாம் மற்றும் தான் விரும்பும் நேரங்களில் வண்டியை ஓட்டினால் போதும் என்ற சிறு பரவசம் தான். அதேபோல் குறைந்த வருமானம் வந்தாலும் அதில் பாதியை வங்கிகளுக்கு தவணையில் செலுத்திவிட்டு மீதம் உள்ளதை வைத்து ஒரு குடும்பத்தை ஒரு அரசை விட கச்சிதமாக கணக்கீட்டின் மூலம் முன்னெடுத்து செல்கின்றனர்.


                                      ஆனால் என்றும் ஒரு சராசரி மனிதனின் கனவுகள் எளிதாக கைகூடி விடுவதே இல்லை. அந்த கனவுகளின் பயணம் பல நேரங்களில் பல விதங்களில் தடுக்கப்படுகிறது அல்லது உடைக்கப்படுகிறது. ஏதேனும் ஒரு நிர்பந்தத்தால் ஒரு வாகனம் காவல் நிலையத்தில் போய்விட்டது என்றால் அன்று விழுகிறது முதல் அடி. பல காவல் நிலையங்களில் பிச்சைக்காரர்களுக்கு அரசு யூனிபோர்ம் கொடுத்து உட்கார வைத்துள்ள மனித சாக்கடைகள் எந்த தயவு தாட்சண்யம் இல்லாமல் வாகனத்தை திருப்பி கொடுக்க விலை பேசுவார்கள். அதுவும் 100/200 என்ற வார்த்தைகள் அல்ல. சில பல ஆயிரங்களில் தான் அவர்களின் முதல் வார்த்தை ஆரம்பமாகும்.அதுவும் பொய் வழக்குகள் என்றால் அவர்கள் பழத்தில் ஊசியை சொருகுவதை போல் மிகவும் சாதுரியமாக பேசி கறந்து விடுவார்கள் . சின்னஞ்சிறு தவறுகள் நம் பக்கம் இருந்தால் நம் சொத்தை எழுதி வாங்காமல் விடமாட்டார்கள். ஏன் மனைவிகளின் தாலி மாலையுடன் சிறு குழந்தைகளின் இடுப்பு கொடியை வரை விற்றாவது தான் பல வாகனங்கள் காவல் நிலையத்தில் இருந்தும் வெளியே கொண்டுவரப்படுகிறது.


                                            ஒரே ஒரு முறை அந்த வாகனம் உள்ளே சென்று வெளியே வந்தால் அந்த சாதாரணமானவர்களின் கனவுகள் சிறியதாக உடைய தொடங்குகிறது. ஆனாலும் அதில் இருந்து மீண்டு வந்துவிடலாம் என்ற சிறு நம்பிக்கையுடன் தான் கண்ணீருடனும், வேதனையுடனும் திரும்ப பழையபடி வேலையை பார்க்க புறப்படுகின்றனர்.
ஆனால் அந்த பிச்சைக்காரர்களுக்கு காசு கொடுக்க வேண்டாம் என்ற மனநிலையில் இருந்தாலும் பல நேரங்களில் அந்த பிச்சைக்கார கூட்டம் வழக்கை காவல் நிலையங்களில் முடிக்க முனையும். அதற்கு தான் ஒவ்வொரு மனிதனும் ஆசையும் படுவான். அதற்கு காரணம் இரண்டு நாள் கழித்து தான் நீதிமன்றத்தில் இருந்து திரும்ப கொண்ட வர முடியும் என்றால் அது மேலும் பல சிக்கல்களை அவர்களுக்கு ஏற்படுத்தும் என்பதை தெரிந்தே இந்த பாவப்பட்டவர்கள் கடன் மற்றும் பண்டப்பாத்திரங்களை விற்றாவது சீக்கிரம் வாகனத்தை வெளியே எடுக்க முற்படுகின்றனர்.


                                          ஆனால் பணம் புரட்ட முடியாமல் போனால் அது தான் அவர்களின் வாழ்வில் ஏற்படும் முதல் கிரகணம் என்றால் அது மிகையல்ல. ஒரு மாதம் அந்த வாகனம் அந்த காவல் நிலையத்தில் இருந்தால் அதற்கு பிறகு எந்தவொரு ஒட்டுனர்க்கும் தன் சொந்த வாகனத்தை அடையாளம் கண்டுபிடிக்கவே தனி சிபிஐ வைக்கவேண்டியது தான் என்பது போய் வந்தவர்களின் கண்ணீர் பதில்கள் .

                                        அங்கே உருகுலைக்கப்பட்டு கிடப்பது அந்த ஒரு வாகன ஓட்டியின் வாகனம் மட்டுமல்ல ஏதோ ஒரு அம்மாவின் தாலி மாலையின் கடைசி கண்ணியும் தான், ஒரு மனைவியின் எதிர்பார்ப்புக்கள் மட்டும் அல்ல அந்த மொத்த குடும்பத்தின் எதிர்காலமே தான். எத்தனை பாவப்பட்டவர்கள் வாழ்கை ஓட்டத்தையே முடித்துள்ளனர் என்பதை அங்கே ஓடாமல் ஒய்ந்து போய் காற்றில்லாமல் நிற்கும் சக்கரங்கள் சொல்லும்...

Monday, 1 September 2014

மனித மிருகங்கள்

     மனித மிருகங்கள்  


                             இன்றைய சூழலில் மனிதன் என்ற வார்த்தைக்கு ஒரே பொருள் மிருக குணம் கொண்டலையும் இரண்டு கால் கொண்ட மனம் புழுத்த  பிணங்கள். மனிதநேயம் என்ற வார்த்தைக்கு இனி மனித மனங்களிலோ , இல்லை வார்த்தைகளிலோ கூட இடம் இருக்கும் என்று நம்புவது மிகப்பெரும் கடினம் என்பது இன்றைய தினசரி வாழ்க்கை நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கின்ற பாடம் என்பது திண்ணம்.

            
                               சகமனிதனை நாம் மனிதனாக பார்க்காவிட்டால் கூட பரவாயில்லை.ஆனால் உயிரும்,உணர்வும் உள்ள ஒரு ஜீவன் என்றாவது எண்ணுவதற்கு ஏன் நம் புத்தியோ இல்லை இதயமோ இடமளிக்கவில்லை என்பது வேதனையிலும் வேதனை தான். மனிதமனங்கள் இன்று மலத்தை விடவும் நாற்றம் அடிக்கும் சாக்கடையாக ஏன் வைத்துக்கொண்டு நடக்கின்றோம் என்று நினைத்து பார்பதற்கு கூட நமக்கு இன்று நேரம் இல்லை. இவ்வளவு பரபரப்பாக எதை தேடி, எதை காப்பாற்ற நாயை விட கேவலமாக அலைந்து திரிந்துக்கொண்டு இருக்கிறோம்.


                          தடுக்கி விழுந்தவனை கைக்கொடுத்து எழுப்பி விடுவதற்கோ , பிழை செய்தவனை அன்புடன் அரவணைத்து ஆதரவு காட்டி திருத்தவோ நாம் இன்று சிறு முயற்சிகள் கூட எடுக்க விருப்பப்படுவதும் இல்லை. நம் முன்னால் ஒருவன் ஓடினால் அவனை தடுக்கி விழவைத்து சிரித்து அவனை வேதனைப்படுத்துவதில் நாம் இன்று மிகவும் ஒற்றுமையுடன் தான் இருக்கின்றோம். இன்றைய நிலையில் நம் அனைவருக்கும் கையில் துப்பாக்கியை தந்து உங்களுக்கு பிடிக்காதவர்களை இந்த ஒருவாரத்தில் கொல்லலாம் என்று அரசாணை பிறப்பித்தல் அடுத்த வாரம் இந்தியாவில் ஒரு மனிதனும் மிஞ்ச மாட்டான் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை.


                    ஒரு நிமிடம் மனம் கொண்டு நமக்கு பிடித்தவர்களிடம் பேசவோ , இன்னொருவரின் வேதனையை கேட்டு கண்ணீர் விடவோ இன்று ஒருவருக்கும் நேரமில்லை. அந்த ஒரு நிமிடம் கிடைத்தால் ஒரு வாடிக்கையாளர் முன் குரங்கை போல் வேடிக்கை காட்டி அவனை மடையனாக்கி 5-ரூபாய் சம்பாதிக்க தான் யோசிக்கிறோம். இன்று பணம் என்ற ஒரு விஷயத்திற்காக நாம் நேரடியாக,மறைமுகமாக பலபேரை வேதனை மற்றும் துயரங்களை அனுபவிக்க வைக்கிறோம். பல நேரங்களில் பலரையும் கேவலப்படுத்துகிறோம். பணம் இல்லாதவனை கையால் ஆகாதவன் என்றும், பிச்சைகாரனை போலவும் காத்திருக்க வைத்து வேடிக்கை காட்டுகிறோம்.

                  
                     மற்றொருவர் படும் வேதனை அவர்கள் வாழும் சூழ்நிலை, அவர்களுக்கு வேண்டிய தேவைகள் என எதுவும் நாம் அறியவேண்டிய நிர்பந்தம் இல்லை என்ற ஒரு குறுகிய கண்ணோட்டத்துடன் தான் இன்று நமது வாழ்க்கை அமைத்துக்கொண்டு இருக்கிறோம். அதை தான் பிறருக்கும் போதிக்கிறோம். நமது அடுத்த தலைமுறைக்கும் இந்த விஷ எண்ணங்களை பிஞ்சு மனங்களில் சிறு வயது முதல் ஏற்றுகிறோம். இந்த முற்கால வினைகள் பிற்காலத்தில் திரும்பவும் வரும் என்று யோசிப்பதும் இல்லை. பணம் தான் நீ சம்பாதிக்க வேண்டும் என்றும் நல்ல குணமோ, இரக்ககுணமோ அல்ல என்று சொல்லி வளர்க்கப்படும் ஒவ்வொரு குழந்தையும் எதிர்காலத்தில் உங்கள் உபயோகங்களும் முடிந்த உடன் உங்களையும் அதே போல் குப்பை தொட்டியில் தூக்கி வீசும் என்பதையும் நினைவில் கொள்க.

                            


                              ஒருகாலத்தில் மனித மனங்களில் விரக்தி குறைவாக தான் இருந்தது என்பது உண்மை. இன்று உதவும் குணம் என்பது அரிதாகிவிட்டது . அடுத்தவர் துயர்கண்டு கண்ணீர் விடும் மனங்கள் விரல் விட்டு எண்ணும் அளவுக்கு சுருங்கி விட்டது என்பது உண்மையே. இன்று பக்கத்து வீட்டில் நடக்கின்ற துயரங்கள் கூட ஏதோ ஆயிரம் கிலோமீட்டர்க்கு அப்பால் நடந்தை போலவும், அறியாததை போலவும் , அமைதியாக கதவுகளை மூடிவிட்டு உள்ளே சிரித்து விளையாடி கொண்டிருக்கின்றோம். அல்லது அதற்கு முயற்சிக்கின்றோம்.


           

                              சொந்தங்களின் மரணங்கள் , நண்பர்களின் பிரிவுகள் என எதுவும் நம்மை அதிர்ச்சி அடையவோ , வேதனை அடையவோ செய்வதில்லை. அதை பணம் ,அல்லது அவர்களின் அந்தஸ்து தான் தீர்மானிக்கின்றது என்பதை என்னவென்று சொல்வது. பக்கத்து வீட்டில் யாரேனும் இடும் மரண ஓலங்கள் கூட நம்மை அசைப்பது இல்லை. இத்தனை கொடூரமான பிணங்களாக வாழ்ந்து எதை சாதித்து விட்டோம்.

அடுத்தவரின் வேதனைகளை கூட வேடிக்கை பார்ப்பதில் நமக்கு அவ்வளவு ஆர்வம். பத்து குழந்தைகள் ஒரு விபத்தில் சிக்கி கொண்டனர் என்பது இன்று நொறுக்கி தீனி தின்று கொண்டே கேட்டு விட்டு அடுத்த சேனலை சீக்கிரம் மாற்றி திரைபடத்தில் வரும் கற்பழிப்பு காட்சியை ரசனையுடன் பார்க்கும் புண்ணியவான்களாக நாம் மாறிக்கொண்டு இருக்கிறோம் என்பது எவ்வளவு அவலம். அந்த குழந்தைகளின் நிலை என்ன என்றோ அவர்களின் வேதனை என்ன என்றோ நாம் சிந்திப்பதும் இல்லை அதை பற்றி அடுத்தவரிடம் ஒரு மனக்குமுறலை வெளிப்படுத்த உண்டான மனம் கூட நம்மிடம் இல்லை. நமக்கு வரும்வரை அனைத்தும் நமக்கு ஒரு பொழுதுபோக்கு செய்தி மட்டுமே. அதில் வரும் எந்த அதிர்ச்சியோ,வேதனையோ நம்மை எவ்விதத்திலும் சீண்டபோவதே இல்லை என்பது நாம் மனிதர்கள் அல்ல மலங்கள் அல்லது மனித மிருகம் என்று நிரூபிக்கிறது...